21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி, ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்டில் கடந்த 4ம் தேதி துவங்கியது. இப்போட்டியில் 71 நாடுகளைச் சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 பேர் களம் கண்டுள்ளனர். இந்நிலையில், இன்று இந்தியா பதக்கங்களை குவித்து வருகிறது.
இன்று காலை நடைபெற்ற மகளிருக்கான 69 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை பூனம் யாதவ் தங்கப் பதக்கம் வென்றார். இதைத் தொடர்ந்து, 94 கிலோ பிரிவினருக்கான பளுதூக்குதலில் விகாஸ் தாகூரும், 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் ரவி குமாரும் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினர்.
இதுதவிர, இன்று நடந்த மகளிருக்கான 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பகேர் தங்கப் பதக்கமும், ஹீனா சித்து வெள்ளிப் பதக்கமும் வென்றனர். இதன் மூலம் இந்தியா 6 தங்கப் பதக்கங்களை இதுவரை வென்றுள்ளது.
அதுமட்டுமின்றி, 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் இன்று நடந்த கால்இறுதியில் 5-0 என்ற கணக்கில் ஸ்காட்லாந்து வீராங்கனையை வீழ்த்தினார். இதன்மூலம், அரைஇறுதி போட்டிக்கு மேரி கோம் தகுதிப்பெற்றுள்ளதால் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் இதில் ஏதாவது ஒன்றை இந்தியாவுக்கு உறுதி செய்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக, 6 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது இந்தியா.