2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட 8 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. ஆனால், இந்த தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இரு நாட்டு அணிகளும் ஆசிய மற்றும் ஐ.சி.சி தொடர்களில் மட்டுமே நேருக்கு நேர் மோதி வருகின்றன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Danish Kaneria says Indian team ‘should not go to’ Pakistan for Champions Trophy 2025
மேலும், 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றது. ஆனால், அப்போது பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத இந்தியா தங்களது போட்டிகளை இலங்கையில் விளையாடி சாம்பியன் பட்டம் வென்றது. இதேபோல், 2025ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை துபாய் அல்லது இலங்கைக்கு மாற்றுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.) பி.சி.சி.ஐ கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இது குறித்து ஐ.சி.சி இன்னும் முடிவு செய்யவில்லை.
மறுபுறம் இந்தியா வரவில்லை என்றால் அவர்களைப் புறக்கணித்து விட்டு மற்ற அணிகளை வைத்து சாம்பியன்ஸ் டிராபியை தங்களது நாட்டிலேயே நடத்த பாகிஸ்தான் முடிவெடுத்துள்ளது. ஆனால் அரசியலையும் விளையாட்டையும் ஒன்றாக கலக்காமல் தங்கள் நாட்டுக்கு வந்து விளையாடுமாறு இந்தியாவிற்கு தொடர்ந்து பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பாகிஸ்தான் வீரர் கருத்து
இந்நிலையில், இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லுக்கூடாது என்று கேட்டுக் கொண்டிருக்கும் அந்த அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா, பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாகவும், ஒருவேளை இந்தியா வந்தால் அதை வைத்து பணத்தை சம்பாதிக்கும் பாகிஸ்தான் பாதுகாப்பு பிரச்சினையை சரி செய்வதை மறந்து விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், "பாகிஸ்தானில் தற்போதைய நிலைமையை பார்க்கும்போது இந்தியா அங்கு செல்லக்கூடாது என்றே நான் சொல்வேன். பாகிஸ்தான் தங்களது நிலைமையை பற்றி சிந்திக்க வேண்டும். ஐ.சி.சி இது பற்றி முடிவு எடுக்க வேண்டும். பெரும்பாலும் இந்தியா துபாயில் விளையாடுவதற்கே வாய்ப்புள்ளது. ஒருவேளை இந்தியா வந்தால் இங்குள்ள ஊடகங்கள், வீடியோக்கள் போன்ற அனைத்தும் லைக்குகளை பெறும். இங்குள்ள பொருட்களும் விற்கப்படும். வீரர்களின் பாதுகாப்புதான் முக்கியம். மரியாதை இரண்டாவது விஷயம்.
தற்சமயத்தில் பிசிசிஐ சிறந்த வேலையை செய்து வருகிறது. அவர்களின் இறுதி முடிவை அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொள்ளும் என்று நினைக்கிறேன். இந்திய கிரிக்கெட் அணி வந்தால் பாகிஸ்தானுக்கு ஸ்பான்சர்ஷிப், ஊடகங்கள் வளர்ச்சி, பணம் போன்றவை பெருகும். ஆனால் தற்போது நீங்கள் முன்னேற்ற முயற்சிக்கும் மற்ற பகுதியையும் பார்க்க வேண்டும். இந்தியாவுக்கு நாங்கள் சென்றபோது அங்கே அனைத்தும் சிறப்பாக இருந்தது. உலகம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் வந்தனர். அங்குள்ள அரசு நல்ல வேலை செய்கிறது. இதுவே நிதர்சனமாகும்" என்று டேனிஷ் கனேரியா கூறியுள்ளார்.
லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியம், கராச்சியில் உள்ள தேசிய மைதானம் மற்றும் ராவல்பிண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகியவற்றில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியங்களை மேம்படுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இவை சாம்பியன்ஸ் டிராபி 2025 ஐ பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஜியோ நியூஸ் படி, இந்த மூன்று மைதானங்களை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 12.80 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது. சமீபத்தில் பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி பிடிபி பேட்டர்னின் லண்டன் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.
நக்வி தலைவர் கிறிஸ் ஹார்டிங் மற்றும் பிற மூத்த அதிகாரிகளைச் சந்தித்து, கலந்துரையாடல்களுக்குப் பிறகு மைதானங்களை சீரமைக்க ஒப்புதல் அளித்துள்ளார். இங்கிலாந்தை தளமாகக் கொண்ட இந்த அமைப்பு உலகம் முழுவதும் சுமார் 200 சர்வதேச அரங்கங்களை உருவாக்கியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“