ஐ.பி.எல் 2025 தொடரில் இன்று (மே 18) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற 60-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை, 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி பெற்றது.
டெல்லி அணி கடைசியாக தர்மசாலாவில் பஞ்சாப் அணியுடன் விளையாட இருந்தது. ஆனால், ஜம்மு மற்றும் பதான்கோட்டில் விமானத் தாக்குதல் எச்சரிக்கை காரணமாக அந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் ஐ.பி.எல் தொடரும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த சூழலில் இன்றைய தினம் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்குகியது. டெல்லி அணியில் இருந்து கே.எல். ராகுல் மற்றும் டுப்ளெசிஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இதில், 10 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்த டுப்ளெசிஸ் அர்ஷத் கான் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். இதனால், டெல்லி அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து, அபிஷேக் போரேல் களமிறங்கினார். இந்த ஜோடி அதிரடியாக ஆடி அணியின் ரன்களை உயர்த்தினர். குறிப்பாக, கே.எல். ராகுல் அரை சதம் விளாசினார். மற்றொரு புறம், 19 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் விளாசிய அபிஷேக் போரேல் சாய் கிஷோர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர், அக்ஸர் படேல், கே.எல். ராகுலுடன் கரம் கோர்த்தார்.
இவரும் தனது பங்கிற்கு 16 பந்துகளில் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸர் என 25 ரன்கள் விளாசி ப்ரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்டப்ஸ் 10 பந்துகளில் இரண்டு சிக்ஸர்களுடன் 21 ரன்கள் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கே.எல் ராகுல் 65 பந்துகளில் 4 சிக்ஸர், 14 பவுண்டரியுடன் 112 ரன்கள் விளாசி அதிரடி காட்டினார். இதனால், டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 199 ரன்கள் குவித்தது. அதன்படி, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது.
குறிப்பாக, டெல்லி அணியினர் எதிர்பார்க்காத வகையில் குஜராத் அணியின் ஆட்டம் இன்று அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சாய் சுதர்சன் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் அதிரடியாக ஆடினர். டெல்லி பவுலர்கள் எவ்வளவோ முயன்றும், இந்த ஜோடியை அவுட்டாக்க அவர்களால் முடியவில்லை.
பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக பறக்க விட்டு இறுதிவரை சிறப்பான ஆட்டத்தை இந்த ஜோடி வெளிப்படுத்தியது. அதன் விளைவாக 19 ஓவர்களில் 205 ரன்களை குஜராத் அணி குவித்தது. சாய் சுதர்சன் 61 பந்துகளில் 12 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் விளாசி 108 ரன்கள் குவித்து இறுதி வரை களத்தில் இருந்தார். இதேபோல், தனது பங்கிற்கு 53 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என்று 93 ரன்கள் அடித்து கில்லும் அவுட்டாகாமல் இருந்தார். இதனால் 10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.