DC vs SRH match review : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் தொடரில், நேற்றைய ஆட்டத்தில்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பேர்ஸ்டோவ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 9.3 ஓவரில் 77 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் 33 பந்தில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த பேர்ஸ்டோவ் 48 பந்தில் 53 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.
அதன்பின் களமிறங்கிய கேன் வில்லியம்சன் 5 பவுண்டரிகள் உள்பட 41 ரன்கள் குவித்து வெளியேறினார். இறுதியாக ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர்.
பிரித்வி 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். கேப்டன் ஸ்ரேஷ் ஐய்யர் 17, அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட், ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பின்னர் வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடாததால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.
என்ன காரணம்?
டெல்லி அணியின் மோசமான பேட்டிங் தான் இந்த தோல்விக்கு முழு காரணமாக பார்க்கப்படுகிறது. 163 என்பது அவ்வளவு பெரிய இலக்காக தெரியவில்லை. மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் போட்ட கிடுக்குபிடியில் சிக்கி டெல்லி அணி தடம் புரண்டது. 15 ரன்கள் வித்யாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. 3-வது ஆட்டத்தில் ஆடிய ஐதராபாத் அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். அதே சமயம் முதல் 2 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த டெல்லி அணிக்கு இது முதலாவது தோல்வியாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil