தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியில் டி20 அணியில் இடம் பெற்றுள்ள தீபக் சாஹர் தனது தந்தையின் உடல்நிலை காரணமாக எங்கும் செல்ல முடியாது என்று கூறியுள்ளார். இதனால், தீபக் சாஹர் தென் ஆப்பிரிக்கா செல்வது கேள்விக்குறியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. அங்கே இந்திய அணி 2 டெஸ் போட்டி, 3 டி20 போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. 3 வகையான போட்டிகளுக்கும் 3 கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தென் ஆப்பிரிக்கா செல்லும் சூரியகுமார் யாதவ் தலைமையிலான டி20 இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் இடம்பெற்றுள்ளார்.
இந்திய அணி விரைவில் தென் ஆப்பிரிக்க செல்ல உள்ள நிலையில், டி20 அணியில் இடம்பெற்றுள்ள தீபக் சாஹர் தனது தந்தைக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், தனது தந்தையை விட்டு எங்கும் செல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால், அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக, தீபக் சாஹர் தனது தந்தைக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவ அவசரநிலை காரணமாக தீபக் சாஹர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 5வது டி20 போட்டியில் இருந்து விலகினார். டிசம்பர் 10-ம் தேதி தொடங்கும் டி20 தொடருக்காக அவர் தென்னாப்பிரிக்காவுக்குச் செல்லவில்லை என்று தெரியவந்துள்ளது.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் விளையாடாவிட்டாலும், அந்த தொடரின் 4வது டி20 போட்டியில் விளையாடினார்.
இந்திய அணியின் இடைக்கால கேப்டன் சூர்யகுமார் யாதவ், தீபக் சாஹர் இந்த தொடரில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறியதற்கு காரணம் அவரது தந்தைக்கு ஏற்பட்ட 'மருத்துவ அவசரநிலை' என்று தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் டி20 கிரிகெட் அணியில் தீபக் சாஹர் பெயர் இடம்பெற்றிருந்தாலும், அவர் தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய அணியுடன் செல்ல முடியுமா என்பது இன்னும் தெரியவில்லை.
இந்நிலையில், தீபக் சாஹர் தனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தனது தந்தையை விட்டுவிட்டு தென் ஆப்பிரிக்காவிற்கு செல்லும் நிலையில் இல்லை என்பதை நிலைமையை வெளிப்படுத்தியுள்ளார்.
“அவரை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். இல்லையெனில் ஆபத்தாக இருந்திருக்கும். தற்போது அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் நான் ஏன் விளையாடவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள். எனக்கு என் தந்தை மிகவும் முக்கியம். . அவர்தான் என்னை கிரிக்கெட் வீரராக ஆக்கினார். என்னால் அவரை இந்த நிலையில் விட்டுவிட்டு எங்கும் செல்லவும் முடியாது” என்று 5வது டி20யில் அவர் இல்லாதது குறித்து ஸ்போர்ட்ஸ் டாக்கிடம் தீபக் சாஹர் கூறினார்.
மேலும், “அதனால்தான் நான் என் தந்தையுடன் தங்கியிருக்கிறேன், அவர் ஆபத்தில் இருந்து மீண்டவுடன், நான் தென் ஆப்பிரிக்காவிற்கு எனது பயணத்தைத் தொடங்குவேன். நான் ராகுல் (டிராவிட்) சார் மற்றும் தேர்வாளர்களுடன் பேசினேன். தற்போது, என் தந்தையின் உடல்நிலை நன்றாக உள்ளது” என்று தீபக் சாஹர் தெரிவித்தார்.
தீபக் சாஹர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டி தொடர்களில் பங்கேற்பது குறித்து தெளிவாக இல்லை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) இந்திய அணியில் அவருக்கு பதிலாக வேறு வீரரின் பெயரை இன்னும் அறிவிக்கவில்லை. தீபக் சாஹர் இந்தியாவுக்காக விளையாடிய போதெல்லாம் சிறப்பாக செயல்பட்டார். ஆனால், பல சந்தர்ப்பங்களில் காயங்களுடன் போராடினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“