10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று புதன்கிழமை இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 49-வது லீக் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
இந்த நிலையில், நடப்பு ஐ.பி.எல்தொடரில் ஒளிபரப்புப் பிரிவில் புதிய சேர்க்கையாக நான்கு கால் கொண்ட ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த உயிரற்ற ரோபோ நாய் அனைத்து அணி வீரர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ரோபோ நாயை முன்னாள் நியூசிலாந்து வீரரும், புகழ்பெற்ற வர்ணனையாளருமான டேனி மோரிசன் அறிமுகப்படுத்தினார்.
இந்த ரோபோ நாய்க்கு 'சாம்பக்' எனப் பெயரிடப்பட்ட நிலையில், அதற்கு குழந்தைகள் பத்திரிகையான 'சம்பக்'-கை வெளியிடும் டெல்லி பிரஸ் பத்ர பிரகாஷன் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், ஐ.பி.எல் கிரிக்கெட்டின் மேற்பார்வையாளராக இருந்து வரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பி.சி.சி.ஐ) எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சவுரப் பானர்ஜி அமர்வுக்கு முன் இன்று புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி பிரஸ்ஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அமித் குப்தா, சம்பக் பத்திரிகை குழந்தைகள் மத்தியில் மிகவும் பிரபலமானது என்றும், பி.சி.சி.ஐ அறிமுகப்படுத்திய ரோபோவுக்கு அதன் பெயரைப் பயன்படுத்துவது வெளியீட்டாளரின் பதிவு செய்யப்பட்ட முத்திரையை தெளிவாக மீறுவதாகும் என்றும் வாதிட்டார்.
"இந்த ஏ.ஐ கருவி [ரோபோ நாய்] சம்பக் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஐபிஎல் நடந்து வருகிறது. இந்த தயாரிப்பு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் ரசிகர்களின் வாக்களிப்பின் அடிப்படையில் ஏப்ரல் 23 அன்று பின்னர் பெயரிடப்பட்டது. இந்த 'ரோபோ நாய்' பற்றி ஊடகங்களில் அதிகமான செய்திகள் உள்ளன." என்றும் அவர் வாதிட்டார்.
இதுபோன்ற பயன்பாட்டினால் வெளியீட்டாளர்களுக்கு என்ன தீங்கு ஏற்படுகிறது என்று நீதிபதி கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் அமித் குப்தா, 'இந்த பயன்பாட்டுக் கருவி இதுவரை அங்கீகரிக்கப்படாதது ஒன்று' எனக் கூறினார்.
அப்போது நீதிபதி, " 'சிகு' என்பது சம்பக் பத்திரிகையில் வரும் ஒரு கதாபாத்திரமா? கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் புனைப்பெயராகவும் பயன்படுத்தப்படுகிறதா? அத்தகைய பயன்பாடு தொடர்பாக எந்த வழக்கும் தொடங்கப்படவில்லை. அதைப் பற்றி நீங்கள் எப்போது அறிந்தீர்கள்? அது உங்களுக்குத் தெரிந்த உண்மைதான், ஆனால் நீங்கள் அதற்கு எதிராக வழக்குத் தொடரவில்லை." என்று கேள்வி எழுப்பினார்.
இதனிடையே, பிசிசிஐ சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜே. சாய் தீபக், சம்பக் என்பது ஒரு பூவின் பெயர் என்று வாதிட்டார். "ரோபோ நாய் என்பது ஒரு தொடரின் கதாபாத்திரத்துடன் தொடர்புடையது, பத்திரிகையுடன் அல்ல," என்று அவர் 'தாரக் மேத்தா கா ஊல்டா சாஷ்மா' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் குறிப்பிட்டும் கூறினார். தொடர்ந்து, பி.சி.சி.ஐ-க்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஜூலை 9 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.