இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக களமாடி வருபவர் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஏராளமான சாதனைகளைப் படைத்திருக்கும் அவர், சமீப காலமாக ரன் சேர்க்க போராடி வருகிறார். தற்போது சொந்த மண்ணில் இந்தியா - நியூசிலாந்து அணிக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் ரன்கள் திரட்டு அவர் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘Virat Kohli should probably go back to domestic cricket to focus on what needs to be done,’ feels Dinesh Karthik
பெங்களூருவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 0, 70 ரன்களும், புனேவில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் 1, 17 ரன்களும் எடுத்தார். புனேவில் நடைபெற்ற போட்டியையும் வென்ற நியூசிலாந்து இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்ற நிலையில், அந்தப் போட்டியின் போது, இடது கை சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னருக்கு எதிராக ரன் சேர்க்க கோலி போராடினார். 2 டெஸ்ட் போட்டியிலும் அவர் மொத்தமாக 88 ரன்கள் எடுத்திருக்கும் நிலையில், அவரின் டெஸ்ட் சராசரி 48-க்கு மேல் குறைந்துள்ளது.
கோலி கடைசியாக தனது டெஸ்ட் சதத்தை 2023 ஆம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் அடித்தார். அதன் பின்னர் 12 இன்னிங்ஸ்களில் விளையாடியிருக்கும் அவர் இரண்டு முறை மட்டுமே அரைசதம் விளாசி 50 ரன்களைக் கடந்துள்ளார். ஒரு காலக் கட்டத்தில் இந்தியாவின் 'ரன் மெஷின்' என புகழாரம் சூட்டப்பட்ட கோலி, ரன் சேர்ப்பதில் 2020 ஆம் ஆண்டிலிருந்து மிகப்பெரிய அளவில் சரிவைக் கண்டுள்ளார். இந்த காலகட்டத்தில் இரண்டு சதங்களை மட்டுமே அவர் அடித்துள்ளார்.
தினேஷ் கார்த்திக் கருத்து
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், சீனியர் பேட்டர் விராட் கோலி, சுழற்பந்து வீச்சுக்கு எதிராக தனது பேட்டிங் ஃபார்மை மீண்டும் பெற உள்நாட்டு போட்டியில் ஆட திரும்ப வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தினேஷ் கார்த்திக் பேசுகையில், “விராட் கோலி சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ஆடுவது எளிதாக இல்லை. அதனால், இந்தத் தொடர் அவருக்கு சிறப்பாக அமையவில்லை. நான்கில் மூன்று இன்னிங்ஸ்கள், அவர் ஏமாற்றம் அளித்துள்ளார். இந்த முறை மட்டும் தான் சுழற்பந்து வீச்சாளர்கள் அவரைத் தொடர்ச்சியாக தொந்தரவு செய்துள்ளனர்.
மேலும், தன்னை வலுப்படுத்திக் கொள்ள அவர் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கண்டுபிடிப்பார் என்று நினைக்கிறேன். அவர் பதில்களைத் தேடும் மனிதராக இருக்கிறார். மேதை மற்றும் சூப்பர் ஸ்டார் என்ற அந்த நிலையை நீங்கள் அடையும் போது, உங்களுக்கு எதிராக சவால்கள் வீசப்படும். இதோ இன்னொரு சவால் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சுழலுக்கு உதவும் ஆடுகளங்களில் விளையாடுவதை இந்தியா விரும்புகிறது. எனவே, அதற்கு அவருடைய விளையாட்டுத் திட்டம் என்ன?.
அவருடைய திறமை என்ன என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்தத் தொடர் அவ்வாறு இருக்கவில்லை. ரசிகர்கள் சொல்வது போல், அவர் நீண்ட காலமாக அதை செய்யவில்லை. அதிலிருந்து நாம் தப்பி ஓட முடியாது. எந்தவொரு வீரரையும், எந்த செயல்திறனையும் மதிப்பிடுவதில் நாம் குறிக்கோளாக இருக்க விரும்புவதால், அதை நான் சுகர்கோட் செய்ய விரும்பவில்லை. தற்போது விராட் கோலியின் கடந்த 2-3 வருட டெஸ்ட் சாதனை, சுழற்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக இல்லை.
அவர் செய்ய வேண்டியது என்னவென்றால், உள்நாட்டு கிரிக்கெட்டுக்குத் திரும்பி, தற்போதைய டி.ஆர்.எஸ் விதிகளுடன் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் பெரும் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை." என்று அவர் கூறியுள்ளார்.
விராட் கோலியின் கடைசி 12 இன்னிங்ஸ்கள்:-
17(40) vs நியூசிலாந்து, புனே
1 (9) vs நியூசிலாந்து, புனே
70 (102) vs நியூசிலாந்து, பெங்களூரு
0 (9) vs நியூசிலாந்து, பெங்களூரு
29 (37)* vs வங்கதேசம், கான்பூர்
47 (35) vs வங்கதேசம், கான்பூர்
17 (37) vs வங்கதேசம், சென்னை
6 (6) vs வங்கதேசம், சென்னை
12 (11) vs தென் ஆப்பிரிக்கா, கேப் டவுன்
46 (59) vs தென் ஆப்பிரிக்கா, கேப் டவுன்
76 (82) vs தென் ஆப்பிரிக்கா, ஜோகன்னஸ்பர்க்
38 (64) vs தென் ஆப்பிரிக்கா, ஜோகன்னஸ்பர்க்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“