தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், கார் பந்தய வீரராகவும் உள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அஜீத்குமார் அணி 3 ஆவது இடம் பிடித்தது. சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற 12 ஆவது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்ற ரேஸிங் அணி 3 ஆவது இடம் பிடித்தது. இதைத் தொடர்ந்து பெல்ஜியம் நாட்டில் Spa Francorchamps சர்கியூட்டில் நடைபெற்ற ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்திலும் அஜித் கலந்துக் கொண்டார்.
இந்த பந்தயத்தில் அஜித்தின் அணி 2-வது இடம் பிடித்து இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய மோட்டார் விளையாட்டு துறைக்கு இது பெருமையான தருணம்" என்று பதிவிட்டுள்ளார்.
அஜித்குமார் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே கார் ரேஸிங்கில் ஈடுபட்டு வருவது தெளிவாக தெரிகிறது. இருப்பினும் சினிமாவிலும் இவரது நடிப்பை குறைத்து பேச முடியாது. இந்த ஆண்டில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் விடாமுயற்சி படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் குட் பேட் அக்லி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
துபாய் மற்றும் இத்தாலியில் நடைபெற்ற ரேஸில் மூன்றாவது இடமும் பெல்ஜியம் ரேஸில் தற்போது இரண்டாவது இடமும் அஜீத் அணி பெற்றதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.