18-வது ஆசிய விளையாட்டி போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலெம்பங் நகரங்களில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், இந்தியா, சீனா, ஜப்பான் உட்பட 45 நாடுகளைச் சேர்ந்த 11,300 வீரர்கள், வீராங்கனைகள் பதக்க வேட்டையாடினர்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவை பொறுத்தவரை கடந்த 2014 போட்டியில், 11 தங்கம், 10 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களுடன் 8-வது இடம் பிடித்தது. தற்போது, 2018 தொடரில், 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 69 பதக்கங்களுடன் அதே 8-வது இடம் பிடித்தது. மேலும் ஒரு தொடரில் இந்தியா அதிக பதக்கம் வென்றது இதுவே முதல்முறையாகும்.
தமிழக வீரர்களுக்கு அதிக பதக்கம்:
தடகளத்தில் 400மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், 400மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய இரண்டிலும் திருப்பூரை சேர்ந்த தருண் அய்யாசாமி 2 வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆடவர் 400 மீட்டர் மற்றும் கலப்பு 400மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழகத்தின் ஆரோக்கிய ராஜீவ் 2 வெள்ளிப்பதக்கங்களை அள்ளினார்.
டென்னிஸ் பிரிவில் தமிழக வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் வெண்கலப்பதக்கம் வென்றார். ஸ்குவாஷ் பிரிவை பொறுத்தவரை இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கம் இல்லாமல் திரும்பியது இல்லை என்றே சொல்லலாம். தனிநபர் பிரிவில் ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிகல் வெண்கலப்பதக்கமும், அணி பிரிவில் வெள்ளியும் வென்றிருந்தனர். ஆடவரில் சவுரவ் கோஷல் தனிநபர், அணி பிரிவில் வெண்கலம் வென்றுள்ளார்.
பாய்மர படகு போட்டியில் கோயம்புத்தூரை சேர்ந்த வர்ஷா வெள்ளிப்பதக்கமும், ஆடவரில் அசோக் தாக்கர் வருண், செங்கப்பா கணபதி வெண்கலமு வென்றனர். டேபிள் டென்னிசில் தமிழக வீரர்கள் சரத் கமல், அமல்ராஜ், சத்யன் ஞானசேகரன் உள்ளிட்ட அணி 4 பதக்கங்களை வென்றது.
100 மீட்டர் தடகளப் போட்டியில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவிற்கு வெள்ளி கிடைத்துள்ளது. அதே போன்று ஆண்கள் டேபிள் டென்னிஸ் போட்டியிலும் முதல்முறையாக இந்திய அணி வெண்கலம் வென்று சாதித்துள்ளது.
பதக்க வென்ற மாநிலங்களின் முழு விபரம்
இந்தியாவின் பதக்க வேட்டையில் இந்த முறை 7 தங்கம், 10 வெள்ளி, மற்றும் 2 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை வென்றதன் மூலம், தடகள வீரர்களின் பங்கு வெகுவாக காணப்பட்டது. முதன்முறையாக ஆசியப் போட்டியில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, மற்றம் 30 வெண்கலம் என மொத்தமாக 69 பதக்கங்களை வென்றது. கடந்த ஆசியப் போட்டியை விட இந்த முறை அதிக பதக்கம் வென்ற போதிலும் பட்டியலில் இந்தியா 8 இடத்தில் நிறைவு செய்தது.
பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரிசுத் தொகையை அறிவித்துள்ளார். தீபிகா பல்லிக்கல், ஜோஷ்னா சின்னப்பா, சுனைனா குருவில்லா ஆகிய மூவருக்கு 30 லட்சம் ரூபார் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்திய அணி, இம்முறை ஹாக்கியில் வெண்கலப் பதக்கம் வென்றது. அந்த அணியில் இடம் பெற்றிருந்த 2 தமிழக வீரர்களுக்கு 20 லட்ச ரூபாய் கொடுக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.