கடந்த ஜுலை மாதம் நடந்துமுடிந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரை வென்று உச்சி முகர்ந்தது பிரான்ஸ் அணி. ஜுலை 15ம் தேதி இறுதிப் போட்டியில், அதீத நம்பிக்கையுடன் களமிறங்கிய குரோஷிய அணியை 4-2 என்ற கோல் கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் வென்றது.
20 ஆண்டுகள் கழித்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது பிரான்ஸ். அந்த அணியில் நட்சத்திர வீரராக கலக்கியவர் பெஞ்சமின் பாவர்ட். 22 வயதே ஆன பெஞ்சமின், பிரான்ஸின் சிறந்த தடுப்பாட்ட வீரர் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர்.
கடந்த ஆண்டு முதல் இவர் பிரான்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நவம்பர் 6, 2017 அன்று பிரான்ஸ் அணிக்காக தனது முதல் சர்வதேச ஆட்டத்தில் களமிறங்கினார். ஆனால், ஒரு வருடத்திற்குள்ளாகவே அணியின் நட்சத்திர வீரர் உருவெடுத்து அசுர வளர்ச்சிப் பெற்றார்.
இவரை அணிக்குள் கொண்டு வந்தது, பிரான்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் டிடியர் டெஸ்சாம்ப்ஸ். ஆனால், பெஞ்சமின் எனும் கால்பந்து வீரனை கண்டறிந்தது ஒரு புதுச்சேரிக்காரர் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், அவர் பெயர் மோகன் ஜோசப். இவர் பிரான்ஸ் நாட்டில் கால்பந்து ஏஜென்ட்டாக பணியாற்றி வருகிறார். பெஞ்சமின் சிறுவனாக இருந்த போது, சில கிளப்புகளுக்காக ஆடிக் கொண்டிருந்தார். அப்போது, பிரென்ச் கிளப்பான Lille-ல் ஆடிக் கொண்டிருந்த பெஞ்சமின் ஆட்டத்திறனை கண்டு வியந்த மோகன், அவர் பெரியளவில் வருவார் என்று நம்பினார்.
இதையடுத்து, பெஞ்சமின் தந்தையை சந்தித்த மோகன், பெஞ்சமின் ஒப்பந்தம் செய்ய முடிவு செய்திருப்பதாக கூறினார். ஏதோ விளையாட்டாக பேசுகிறார் என்று பெஞ்சமினின் தந்தை அதனை தவிர்த்திருக்கிறார். அந்தளவிற்கு, தனது மகன் மீது அவருக்கே நம்பிக்கை இல்லை. ஆனால், தொடர்ந்து வற்புறுத்திய மோகன், 'இவன் ஒருநாள் மாபெரும் வீரனாக உருவெடுப்பான்' என்று நம்பிக்கை அளித்து, 'வரும் உலகக் கோப்பையில் இவன் பிரான்ஸ் அணிக்காக ஆட வேண்டும்' என்று தெரிவித்திருக்கிறார்.
மோகனின் நம்பிக்கையை வீணடிக்காத பெஞ்சமின் பாவர்ட் தான், இன்று பிரான்ஸ் அணியின் புது ஹீரோ. உலகக் கோப்பையில் அவரது அபார ஆட்டத்தின் மூலம், பிரான்ஸ் மக்களின் இதயங்களை ஆக்கிரமித்துள்ளார். உலகக் கோப்பையை வென்ற பின், அவர் கோப்பைக்கு முத்தமிட்ட புகைப்படம் தான் பிரான்ஸ் வீதிகள் முழுக்க ஆக்கிரமித்தது.
இப்படிப்பட்ட திறமையான வீரரை கண்டறிந்த மோகன், இன்று பிரான்ஸ் கால்பந்து அணியில் மிகவும் பிரபலமான நபராக வலம் வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/11/a82-300x217.jpg)
மோகன் புதுச்சேரியைச் சேர்ந்தவர். ஆனால், அவருக்கு நான்கு வயது இருக்கும் போதே, அவரது பெற்றோர்கள் பிரான்ஸுக்கு குடிபெயர்ந்துவிட்டனர். இதனால், மோகன் தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரெஞ்சுக்காரராக உள்ளார்.
இப்போது, இந்தியா வந்துள்ள மோகன், இங்குள்ள சிறந்த கால்பந்து வீரர்களை அடையாளம் காணவுள்ளார்.
வெல்கம் மோகன்!