மூன்றாம் தரப்பினரின் அத்துமீறிய தலையீட்டால் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை உடனடியாக சஸ்பெண்டு செய்வது என பிபா முடிவு செய்துள்ளது.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சம்மேளனம் (பிபா), "மூன்றாம் தரப்பினரின் தேவையற்ற தலையீடு" காரணமாக, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை (AIFF) உடனடியாக சஸ்பெண்டு செய்துள்ளது என்று உலக கால்பந்து நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சம்மேளனம் (பிபா) வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்றாம் தரப்பினரின் அத்துமீறிய தலையீட்டால் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை உடனடியாக சஸ்பெண்டு செய்வது என பிபா கவுன்சில் ஒருமித்த முடிவு எடுத்து இருக்கிறது. இந்த தலையீடானது, பிபா அமைப்பின் விதிகளை மீறிய தீவிர செயல் என கருதப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சம்மேளனம் விதித்துள்ள இந்த இடைக்கால தடையால் வருகிற அக்டோபர் 11-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் இந்தியாவில் நடைபெற திட்டமிடப்பட்ட 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிபா மகளிர் உலக கோப்பை 2022 கால்பந்து போட்டிகள், திட்டமிட்டபடி இந்தியாவில் நடத்தப்பட இயலாது.
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கான தேர்தல் 18 மாதங்களாக நடத்தப்படாமல் நிலுவையில் இருந்து வரும் நிலையில், அமைப்பை கலைக்க கடந்த மே மாதம் உத்தரவிட்ட இந்திய உச்ச நீதிமன்றம், தேர்தலை விரைவில் நடத்தவும், அமைப்பின் அரசியலமைப்பை திருத்துவதற்கும் மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்தது.
மேலும், இந்த மாத தொடக்கத்தில், தேர்தலை உடனடியாக நடத்தவும், தேர்ந்தெடுக்கப்பட்ட குழு மூன்று மாதங்களுக்கு இடைக்கால அமைப்பாக இருக்கும் என்றும் அதன் உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
இதனைச் செயல்படுத்தும் விதமாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சம்மேளனம் மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு இணைந்து பொதுச்செயலாளர் வின்ட்சர் ஜான் தலைமையிலான குழுவை இந்திய கால்பந்து பங்குதாரர்களை சந்திக்க அனுப்பியது. அந்த குழு, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அதன் சட்டங்களை ஜூலை மாத இறுதிக்குள் திருத்துவதற்கும், அதன்பின் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தலை முடிப்பதற்கும் ஒரு திட்டத்தை வகுத்து கொடுத்தது.
இந்நிலையில், சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சம்மேளனம் (பிபா) அதன் அறிக்கையில், போட்டி தொடர் நடத்துவதற்கான அடுத்த வழிமுறைகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது எனவும், எப்போது தேவைப்படுமோ அப்போது, அதுபற்றி கவுன்சிலுக்கு தெரிவிக்கப்படும் என்றும் பிபா தெரிவித்துள்ளது.
முன்னனதாக, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கான தேர்தல் பிபா-வின் கவுன்சில் உறுப்பினர் பிரஃபுல் படேல் தலைமையில் டிசம்பர் 2020 க்குள் நடத்தப்படவிருந்தன. ஆனால் அதன் அரசியலமைப்பின் திருத்தங்கள் மீதான முட்டுக்கட்டை காரணமாக தேர்தல் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது.
"மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துடன் பிபா தொடர்ந்து ஆக்கபூர்வமான தொடர்பில் உள்ளது. மேலும் இந்த வழக்கில் இன்னும் ஒரு நேர்மறையான முடிவை அடைய முடியும் என்று நம்புகிறோம்." என்று பிபா தெரிவித்துள்ளது.
பிபா-வின் சட்டங்களின்படி, உறுப்பினர் கூட்டமைப்புகள் அந்தந்த நாடுகளில் சட்ட மற்றும் அரசியல் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும். பிபா முன்பு இதே போன்ற வழக்குகளில் மற்ற தேசிய சங்கங்களை இடைநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil