பிசிசிஐயின் முன்னாள் தலைவர் என் சீனிவாசனின் மகள், ரூபா குருநாத் வியாழன் அன்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (TNCA) தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
ரூபா, 2019 செப்டம்பரில் TNCA தலைவராக பொறுப்பேற்றார், இதன்மூலம் இந்தியாவில் ஒரு மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு தலைமை தாங்கும் முதல் பெண்மணி ஆனார்.
அவரது பதவிக்காலம் 2022ஆம் ஆண்டும் செப்டம்பர் மாதம் வரை இருக்கும் நிலையில், , தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ரூபா குருநாத் அறிவித்தார். மேலும் வணிகம் மற்றும் தனிப்பட்ட பொறுப்புகளில் அதிக நேரத்தை செலவிட போவதாக அவர் கூறினார்.
ரூபா குருநாத் இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் முழு நேர இயக்குநராக உள்ளார்.
பதவி ராஜினாமாக்கு பிறகு ரூபா வெளியிட்ட செய்திக்குறிப்பில்,” தனது பதவிக்காலத்தில் தாராளமாக ஒத்துழைத்த உயர்மட்ட கவுன்சில், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் TNCA உறுப்பினர்களுக்கு நன்றி. மேலும் நாட்டின் மிகவும் மதிப்புமிக்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பணியாற்றியது மகிழ்ச்சி மற்றும் உண்மையான மரியாதை.
"எனது பதவிக் காலத்தில் ஆதரவளித்த அனைத்து உச்ச கவுன்சில் உறுப்பினர்கள், வீரர்கள், ஊழியர்கள், நகரம் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த TNCA உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று ரூபா கூறியுள்ளார்.
இதற்கிடையில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி, டி.என்.சி.ஏ., பதவியை விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாகவோ, அரசு அல்லது திமுக கட்சி ஆதாரங்களில் இருந்து எந்த ஒரு உறுதியான தகவல்களும் வெளியாகவில்லை.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக ரூபா குருநாத் இருந்தபோது, தமிழ்நாடு கிரிக்கெட் அணி சிறப்பாக செயல்பட்டது. குறிப்பாக 2020-21 மற்றும் 2021-22 ஆகிய இரண்டு சையத் முஷ்டாக் அலி தொடரில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“