Advertisment

பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த ஒரே நபர்: ஜூம் வீடியோ காலில் கம்பீருக்கு நேர்காணல்

இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த ஒரே விண்ணப்பதாரரான முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் இன்று செவ்வாய்கிழமை கிரிக்கெட் ஆலோசனைக் குழு முன் நேர்காணலுக்கு ஆஜராக இருக்கிறார்.

author-image
WebDesk
New Update
Gautam Gambhir only applicant for job of India mens cricket coach to be interviewed today Tamil News

இந்திய அணியின் புதிய பயிற்சியாளருக்கான பதவிக்காலம் ஜூலை 2024 இல் தொடங்கி டிசம்பர் 31, 2027 வரை நீடிக்கும்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Gautam Gambhir | BCCI | Indian Cricket Team: இந்திய ஆடவர் சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக்காலம் தற்போது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைகிறது. 

Advertisment

இந்நிலையில், இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலை தொடங்கிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ), தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கடந்த மே 13 ஆம் தேதி அழைப்பு விடுத்தது. இதற்கு ஐ.பி.எல் இறுதிப் போட்டிக்கு அடுத்த நாளான மே 27 அன்று காலக்கெடுவாக இருந்தது. 

நேர்காணல் 

இந்த நிலையில், இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த ஒரே விண்ணப்பதாரரான முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் இன்று செவ்வாய்கிழமை நேர்காணலுக்கு ஆஜராக இருக்கிறார். அவரை ஜூம் வீடியோ கால் மூலம் கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சி.ஏ.சி) நேர்காணல் செய்யவிருக்கிறது. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Gautam Gambhir, only applicant for job of India men’s cricket coach, to be interviewed today

மே மாத இறுதியில் நடைபெற்று முடிந்த 17-வது ஐ.பி.எல் டி20 தொடரில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில், அந்த அணியின் வெற்றிக்கு மூளையாக கம்பீர் செயல்பட்டு இருந்தார். கே.கே.ஆர் அணியின் ஆலோசகராக பொறுப்புக்கு வந்த முதல் ஆண்டிலேயே அவர் தனது அணி கோப்பையை முத்தமிட உதவினார். அவரது தலைமையிலான கொல்கத்தா அணி ஏற்கனவே 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. 

இந்த நிலையில், அவர் இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளார் என்கிற தகவல் வெளியாகியது. புதிய பயிற்சியாளருக்கான பதவிக்காலம் ஜூலை 2024 இல் தொடங்கி டிசம்பர் 31, 2027 வரை நீடிக்கும். அதாவது அடுத்த ஒருநாள் உலகக் கோப்பை ஆண்டு வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிரிக்கெட் ஆலோசனைக் குழு

கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் (சி.ஏ.சி) முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அசோக் மல்ஹோத்ரா, ஜதின் பரஞ்ச்பே மற்றும் சுலக்ஷனா நாயக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சலீல் அன்கோலாவுக்குப் பதிலாக மாற்று தேர்வாளரைக் கண்டறியவும் சி.ஏ.சி நேர்காணல் நடத்த உள்ளது. அன்கோலா மற்றும் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் இருவரும் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். எனவே புதிய தேர்வாளர் வடக்கு மண்டலத்திலிருந்து காலியாக உள்ள இடமாக இருக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் அகர்கர் நியமிக்கப்பட்டார். ஸ்டிங் ஆபரேஷன் சர்ச்சையில் சிக்கி விலகிய சேத்தன் ஷர்மாவுக்கு பதிலாக அவர் நியமிக்கப்பட்டார். அகர்கர் பொறுப்பேற்ற போது அன்கோலா ஏற்கனவே தேர்வாளராக இருந்தார்.

இந்த நேர்காணல்களைத் தொடர்ந்து, சி.ஏ.சி பி.சி.சி.ஐ-க்கு பரிந்துரைகளை வழங்கும். “தலைமைப் பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர் பதவிக்கான நேர்காணல் அமர்வை நாங்கள் நடத்த உள்ளோம். சி.ஏ.சி தனது பரிந்துரையை பி.சி.சி.ஐ-க்கு சமர்ப்பிக்கும், அதன்பிறகு வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும்” என்று பி.சி.சி.ஐ வட்டாரங்கள் உறுதிப்படுத்தினர். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Gautam Gambhir Bcci Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment