10 அணிகள் களமாடிய 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்ச்சை நடத்தின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 18 ஆண்டுக்குப் பிறகு, முதன்முறையாக சாம்பியன் பட்டமும் வென்றது.
இந்நிலையில், 18 ஆண்டுக்குப் பின் கோப்பை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டம் சோகத்தில் முடிந்தது. பெங்களூரு நகரில் நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஏராளமான ரசிகர்கள் ஆர்.சி.பி அணி வீரர்களை நேரில் பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் மைதானத்திற்குள் செல்ல முந்தியடித்தனர். இதனால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. போதிய முன்னேற்பாடுகள் இன்றி வெற்றிக்கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்ததே இந்த துயர நிகழ்வுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த துயர சம்பவத்திற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆர்.சி.பி அணி நிர்வாகம், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதேபோல், கர்நாடகா கிரிக்கெட் சங்கம் ரூ.5 லட்சம் நிவாரணத்தொகை அறிவித்துள்ளது. ஏற்கனவே கர்நாடக அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை அறிவித்தது.
இந்த நிலையில், ஆர்.சி.பி அணி போன்று வெற்றி ஊர்வலங்களில் நம்பிக்கை இல்லை என்றும், இதற்கு தான் ரசிகன் அல்ல என்றும், இதுபோன்ற விஷயங்கள் தேவையில்லை என நம்புவதாகவும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
“வெற்றி ஊர்வலங்களில் எனக்கு ஒருபோதும் நம்பிக்கை இல்லை. நான் விளையாடும்போது இதே கருத்தைத்தான் கூறினேன். 2007ல் வென்ற பிறகும், வெற்றி ஊர்வலங்கள் நடத்தக்கூடாது என்று கூறினேன். ஏனெனில், வெற்றி ஊர்வலங்களை விட மக்களின் வாழ்க்கை மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன், எதிர்காலத்தில், இது போன்ற வெற்றி ஊர்வலங்களை நடத்தாமல் இருப்பது குறித்து நாம் கொஞ்சம் விழிப்புடன் இருக்க முடியும் என்றும், அதை மூடிய கதவுகளுக்குள் அல்லது ஒரு மைதானத்தில் நடத்தலாம் என்றும் நான் கூறுவேன். நேற்று நடந்தது மிகவும் துயரமானது, தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
நாம் ஒரு உரிமையாளராக இருந்தாலும் சரி, ஒவ்வொரு அம்சத்திலும் பொறுப்புள்ள குடிமக்களாக இருக்க வேண்டும். நாங்கள் ஒரு வெற்றி ஊர்வலங்களை நடத்தத் தயாராக இல்லை என்றால், அதைச் செய்திருக்கக் கூடாது. இப்போது நீங்கள் அந்த 11 பேரை இழந்திருக்க மாட்டீர்கள்." என்று அவர் கூறியுள்ளார்