இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு காஷ்மீர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ஏப்ரல் 22 அன்று எச்சரிக்கை செய்திகளுடன் மதியம் மற்றும் மாலையில் இரண்டு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்ததாக கூறப்படுகிறது.
மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததையடுத்து கவுதம் கம்பீர் டெல்லி காவல்துறையை அணுகி புகார் அளித்துள்ளதாக எஸ்.எச்.ஓ ராஜீந்தர் நகர் காவல் நிலைய மற்றும் மத்திய டெல்லி டி.சி.பி ஆகியோர் ஏப்ரல் 24 தெரிவித்தனர்.
"பாஜக முன்னாள் எம்.பி.யும், இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான கவுதம் கம்பீருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் காஷ்மீர் அமைப்பு கொலை மிரட்டல் விடுத்தது. ஏப்ரல் 23 அவர் டெல்லி காவல்துறையை அணுகி, எஃப்.ஐ.ஆர் கோரி முறையான புகாரைப் பதிவு செய்து, தனது குடும்பத்தின் பாதுகாப்பைப் பாதுகாக்க நடவடிக்கை கோரியிருந்தார்" என்று கவுதம் கம்பீர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த வாரம் பைசரன் பள்ளத்தாக்கு புல்வெளியில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கம்பீர் தனது இரங்கலை தெரிவித்ததை அடுத்து இந்த மின்னஞ்சல் வந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் நட்சத்திரத்திற்கு இதுபோன்ற மிரட்டல்கள் வருவது இது முதல் முறை அல்ல. நவம்பர் 2021 இல், கவுதம் கம்பீர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இதேபோன்ற மின்னஞ்சல் வந்தது குறிப்பிடத்தக்கது.
கவுதம் கம்பீரை தொடர்ந்து இர்பான் பதான், யுவராஜ் சிங், ஷுப்மன் கில், வீரேந்திர சேவாக் ஆகியோர் பஹல்காம் தாக்குதலுக்கு எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்ஹ்டு பதிவிட்டுள்ளனர்.