Gautam Gambhir | Ms Dhoni: இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற கேப்டனாக எம்.எஸ் தோனி திகழ்கிறார். அவரது தலைமையிலான இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என கோப்பைகளை வாங்கிக் குவித்தது. மேலும், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 3 ஃபார்மெட்டுகளிலும் கொடி கட்டி பறந்தது.
குறிப்பாக, 2011 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில், இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் தோனி தனது கையால் சிக்ஸரை பறக்கவிட்டு ஃபினிஷிங் கொடுப்பார். இந்த தருணம் கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் பசுமரத்து ஆணி போல, ஆழமாகப் பதிந்துகிடக்கிறது. அத்துடன் 2011 உலகக்கோப்பை என்றாலே, "தோனி" தான் என அவரை ஹீரோவாக இந்திய ரசிகர்கள் இன்றளவும் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள்.
ஆனால், சச்சின் முதல் ஜாகீர் கான் வரை அனைவரும் சேர்ந்து தான் உலகக்கோப்பையை வென்றுக் கொடுத்தார்கள் என்றும், தோனியை மட்டும் ரசிகர்கள் ஹீரோவாக கொண்டாடுவதாகவும் கவுதம் கம்பீர் விமர்சித்திருந்தார். இதையடுத்து, கம்பீருக்கு ஆதரவாக சிலரும், தோனிக்கு ஆதரவாக சிலரும் என இணைந்து கொண்டு இணையத்தில் கடும் விவாதத்தில் ஈடுபாடுவார்கள். இந்த ரசிகர்கள் சண்டையால் சமூக வலைதளத்தில் பெரும் அக்கப்போரே நடக்கும்.
கம்பீர் vs தோனி ரசிகர்கள் சண்டை சில மாதங்களாக இல்லாமல் இருந்த நிலையில், அதற்கான விவாதத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் பிரவீன் குமார் மீண்டும் ஒருமுறை கிளப்பியுள்ளார். கம்பீரின் கருத்தை வரவேற்கும் விதமாக பேசியுள்ள அவர், 2011 ஒருநாள் உலகக் கோப்பை தனி ஒருவரால் பெற்றதில்லை என்று தெரிவித்துள்ளார்.
"ஹீரோ வழிபாட்டில் இருந்து இந்தியா வெளிவர வேண்டும். அது அரசியலாக இருந்தாலும் சரி, இந்திய கிரிக்கெட் அல்லது டெல்லி கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி. ஹீரோக்களாக முன்னிறுத்த கூடாது. நாம் வணங்க வேண்டியது இந்திய கிரிக்கெட் அல்லது டெல்லி கிரிக்கெட் அல்லது இந்தியாவைத் தான். இது போன்றவையை உருவாக்கியது யார்?. அவை இந்த இரண்டு விஷயங்களால் தான் உருவாக்கப்படுகிறது. முதலில், சமூக ஊடகப் பின்தொடர்பவர்களால், அது இந்த நாட்டில் உள்ள போலியான விஷயம். இரண்டாவது, ஊடகங்கள் மற்றும் ஒளிபரப்பாளர்களால் நடக்கிறது, " என்று கம்பீர் கூறியிருந்தார்
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் பேசுகையில், "கம்பீர் பாய் மிகவும் சரியாக சொன்னார். இது மல்யுத்தம் போன்ற மற்ற விளையாட்டுகள் கிடையாது. கிரிக்கெட்டில் ஒரு வீரர் மட்டும் வெல்ல முடியாது. 2011 உலகக்கோப்பையில் யுவராஜ் சிங் 15 விக்கெட்டுகள் எடுத்து நிறைய ரன்கள் அடித்தார். ஜாகீர் கான் 21 விக்கெட்டுகள் எடுத்தார். கவுதம் கம்பீர் 2007, 2011 ஆகிய 2 தொடர்களின் பைனலிலும் ரன்கள் அடித்தார். தோனி 2011 பைனலில் ரன்கள் அடித்தார்.
பொதுவாக குறைந்தது 3 பேட்ஸ்மேன்கள் நல்ல பார்மில் இருந்து 2 பவுலர்கள் விக்கெட்டுகளை எடுத்தால்தான் ஒரு அணி வெல்லும். எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் ஒரு வீரர் தொடரை வெல்ல முடியாது. இருப்பினும் இந்திய கிரிக்கெட்டில் ஹீரோவாக கொண்டாடப்படும் கலாச்சாரம் இருக்கிறது. 1980 முதலே உள்ள இந்த கலாச்சாரம் தவறானது. சில நேரங்களில் வீரர்கள் கிரிக்கெட்டை விட பெரியவர்களாக பாவிக்கப்படுகின்றனர். குறிப்பாக அதிக பிராண்ட் சப்போர்ட் கொண்டவர்கள் அதிக வெளிச்சத்தை பெறுகின்றனர்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“