ஐ.பி.எல் 2025 தொடரில் இன்று (மே 25) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் 67-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதிக்கொண்டது.
இன்றைய போட்டிக்கான டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, சென்னை அணியில் இருந்து ஆயுத் மாத்ரே மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் களமிறங்கினர். இதில் தொடக்கத்தில் இருந்து அதிரடி காண்பித்த மாத்ரே பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக பறக்க விட்டார்.
அதன்படி, 17 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் விளாசிய அவர் 34 ரன்கள் சேர்த்தார். எனினும், பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் மாத்ரே தனது விக்கெட்டை இழந்தார். இதைத் தொடர்ந்து, உர்வில் படேல் களமிறங்கினர். மற்றொரு புறம், டெவோன் கான்வே தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில், அணியின் ரன்ரேட் கணிசமாக உயர்ந்த போது, சாய் கிஷோர் வீசிய பந்தில் உர்வில் படேல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரும் தன் பங்கிற்கு 19 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 37 ரன்கள் அடித்தார்.
அடுத்ததாக களமிறங்கிய ஷிவம் தூபே 17 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இதனிடையே, அரை சதத்தை கடந்த கான்வே விக்கெட்டை ரஷித் கான் கைப்பற்றினார். இவர் 35 பந்துகளில், 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் குவித்திருந்தார். இந்நிலையில், டெவால்ட் பிரேவிஸ் அதிரடியாக அணியின் ரன்களை உயர்த்தினார். குறிப்பாக, 23 பந்துகளில், 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என பறக்க விட்ட அவர் 57 ரன்கள் சேர்த்தார். இறுதியாக அவரும் ஆட்டமிழந்தார். ஜடேஜா 21 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்களை சென்னை அணி குவித்தது. அதன்படி, 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் குஜராத் அணி பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியில் இருந்து சாய் சுதர்சன் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில் ஷுப்மன் கில் 13 ரன்களில் வெளியேறினாலும் சாய் சுதர்சன் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால், அடுத்ததாக களமிறங்கிய ஜாஸ் பட்லர் 5 ரன்களிலும், ருதர்ஃபோர்ட் ரன்கள் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதேபோல், ஷாருக் கான் 19 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனிடையே, சாய் சுதர்சனும் 41 ரன்களில் அவுட்டானார். இதனால், குஜராத் அணி ரன்கள் குவிக்க முடியாமல் தடுமாறியது.
முடிவில் முகமது சிராஜ் 3 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் குஜராத் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக காம்போஜ் மற்றும் நூர் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டுகளும், கலில் அகமது மற்றும் பதிரானா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.