10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025, GT vs LSG LIVE Cricket Score
இந்நிலையில், இன்று இரவு 7:30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 64-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு செய்தது. அதனால், லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியில் இருந்து ஐடன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி அணிக்கு வலுவான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். குறிப்பாக, மிட்செல் மார்ஷ் அரை சதம் விளாசினார். மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐடன் மார்க்ரம் 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து, மிட்செல் மார்ஷுடன் நிக்கோலஸ் பூரன் கரம் கோர்த்தார். இவர்கள் இருவரும் குஜராத் அணி பவுலர்களின் பந்து வீச்சை சிதறடித்தனர். ஒரு கட்டத்தில் இவர்களின் விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் குஜராத் அணியினர் திணறினர். அதன்பேரில், சிக்ஸர்களும், பவுண்டரிகளும் விளாசிய மிட்செல் மார்ஷ் சதம் அடித்தார். அதன்படி, 64 பந்துகளில் 10 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் அடித்து 117 ரன்கள் குவித்த அவரது விக்கெட்டை அர்ஷத் கான் கைப்பற்றினார்.
நிக்கோலஸ் பூரனும் தனது பங்கிற்கு 27 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் விளாசி 56 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், 6 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 16 ரன்கள் குவித்திருந்தார். இதனால், லக்னோ அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது. இந்நிலையில், 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதில், சாய் சுதர்சன் 16 பந்துகளில் 4 பவுண்டரிகள் அடித்த நிலையில், 21 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு புறம், கில்லும் 35 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
அடுத்ததாக களமிறங்கிய ஜாஸ் பட்லர் 33 ரன்கள் எடுத்த நிலையில் அவரது விக்கெட்டை ஆகாஷ் சிங் கைப்பற்றினார். ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், தனது பங்கிற்கு 38 ரன்கள் சேர்த்தார். ஆனால், ஷாருக் கான் அதிரடியாக விளையாடி அணியின் ரன்களை உயர்த்தினார். குறிப்பாக, 29 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசிய அவர் 57 ரன்கள் சேர்த்தார். எனினும், அவேஷ் கான் பந்து வீச்சில் அவர் தனது விக்கெட்டை இழந்தார்.
இதன் பின்னர், களமிறங்கிய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், கடுமையாக போராடிய போதிலும் குஜராத் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.
குஜராத் அணியில் இருந்து வில்லியம் ஒரூர்கே மூன்று விக்கெட்டுகளையும், அவேஷ் கான், ஆயுஷ் படோனி இரண்டு விக்கெட்டுகளையும், ஷாபாஸ் அகமது மற்றும் ஆகாஷ் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: மிட்செல் மார்ஷ், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), ஆயுஷ் படோனி, அப்துல் சமத், ஹிம்மத் சிங், ஷாபாஸ் அகமது, ஆகாஷ் தீப், அவேஷ் கான், வில்லியம் ஒரூர்கே.
குஜராத் டைட்டன்ஸ்: சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, ரஷித் கான், அர்ஷத் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா