IPL 2022 finals Match Online GT vs RR, Streaming Today: 15 ஆவது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்சும், ராஜஸ்தான் ராயல்சும், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது.
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி தொடக்கம் முதலே பேட்டிங், பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. சுப்மான் கில், டேவிட் மில்லர், ராகுல் திவேதியா, சஹா, முகமது ஷமி, ரஷித்கான் என நட்சத்திர பட்டாளம் உள்ளது.
அதேபோல், சஞ்சு சாம்பன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஒன்றை நம்பிக்கை நாயகமான ஜாஸ் பட்லர் திகழ்கிறார். அவரது விக்கெட்டை வீழ்த்துவது தான், எல்லா அணியின் ஒரே குறிக்கோளாக இருந்து வருகிறது. அவர் மட்டுமில்லாமல் சாம்சன், தேவ்தத் படிக்கல், ஜெய்ஸ்வால், ஹெட்மயர், அஸ்வின், சாஹல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த சீசனில் இவ்விரு அணிகளும் 2 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. லீக் சுற்றில் குஜராத் 37 ரன்கள் வித்தியாசத்திலும், முதலாவது தகுதி சுற்றில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் ராஜஸ்தான் அணியும் வென்றது. மீண்டும் ஒருமுறை, இவ்விரு அணிகளும் மோதுவதால், அதுவும் இறுதிப் போட்டியில் விளையாடுவதால் மகுடம் சூடப்போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது.
ஐபிஎல் நிறைவு விழா
ஐபிஎல் 2022 விளையாட்டுப் போட்டிகலுக்கான நிறைவு விழாவில், ஏஆர் ரஹ்மான், நீத்தி மோகனின் இசைநிகழ்ச்சியும், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிலையில், இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து, தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - பட்லர் களமிறங்கினர். 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் யாஷ் தயாள் பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து பட்லர் உடன் சாம்சன் ஜோடி சேர்ந்தார். பவுண்டரி மூலம் ரன் கணக்கை தொடங்கிய சாம்சன் குஜராத் கேப்டன் ஹர்திக் வீசிய பந்தில் சாய் கிசோர்-யிடம் கேட்ச் கொடுத்து 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து படிக்கல் களமிறங்கினார்.
ஒரு பக்கம் பட்லர் அதிரடியாக விளையாட மறுபக்கம் அடுத்தடுத்து விக்கெட் வீழ்ந்தது. பட்லர் சரிவில் இருந்து மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பட்லர் 39 ரன்கள் எடுத்து பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்ததையடுத்து ராஜஸ்தான் அணி படுத்துவிட்டது. தொடர்ந்து, ஹர்திக் பாண்டியா, சிம்ரன் ஹெட்மயரை காட் அண்ட் பவுல்ட் செய்து அவுட் ஆக்கினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆனதால், ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி தரப்பில், கேப்டன் ஹர்திக் பாண்டியா 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
131 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் நிதானமாக விளையாடி 18.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இதன் மூலம், குஜராத் டைட்டன்ஸ் அணி பங்கேற்ற முதல் ஐபிஎல் தொடரிலேயே கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil