10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அரங்கேறும் 51-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணியில், தொடக்க வீரர்கள், சாய் சுதர்சன் – கேப்டன் சுப்மான் கில் ஆகிய இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். இதனால் குஜராத் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. குறிப்பாக, ஒரே ஓவரில் 5 பவுண்டரிகள் அடித்த சாய் சுதர்சன் அதிரடியில் மிரட்டினார்
அரைசதத்தை நெருங்கிய சாய் சுதர்சன், 23 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல்’ விக்கெட்டுக்கு, 7 ஓவர்களில் 87 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்த ஜோஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் சுப்மான் கில் அரைசதம் கடந்து அசத்தினார். 38 பந்துகளை சந்தித்த கில், 10 பவுண்டரி 2 சிக்சருடன் 76 ரன்கள் எடுத்து துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். அடுத்து வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார்.
சுந்தர் ஒரு பக்கம் நிதானமாக விளையாட மறுமனையில் அதிரடியாலி அசத்திய பட்லர் அரைசதம் கடந்து அசத்தினார். 37 பந்துகளை சந்தித்த அவர், 3 பவுண்டரி 4 சிக்சருடன் 64 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 16 பந்துகளில் 1 சிக்சருடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில், குஜராத் அணி 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது, நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜராத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்தது.
ஷாருக்கான் 6 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஐதராபாத் அணி தரப்பில், உனத்கட் 3, கம்மின்ஸ், அன்சாரி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணியில், டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினார். இதில் இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், டிராவிஸ் ஹெட் 16 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன் 17 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த க்ளாசன் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்க்க முயற்சித்த நிலையில், 18 பந்துகளில் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுமனையில் நங்கூரம் போட்ட அபிஷேக் சர்மா அரைசதம் கடந்து அசத்திய நிலையில், 41 பந்துகளில் 4 பவுண்டரி 6 சிக்சருடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்களில், அங்கித் வர்மா 3, கமித்து மெண்டீஸ் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
7-வது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் கம்மின்ஸ் நித்தீஷ் குமார் ரெட்டி ஜோடி இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. ஆனால் அந்த ரன்கள் தோல்வியின் விகிதத்தை குறைக்கவே உதவியது. நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜாத் அணி வெற்றி பெற்றது. கம்மின்ஸ் 10 பந்துகளில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சருடன், 19 ரன்களும், நித்தீஷ் குமார் ரெட்டி 10 பந்துகளில் ஒரு பவுண்டரி 2 சிக்சருடன் 21 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
குஜராத் அணி சார்பில், சிராஜ், பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், கோட்சி, இஷாந்த் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழு்த்தினர். இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி 10 போட்டிகளில் 7 வெற்றியுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஐதராபாத் அணி 6 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது
நேருக்கு நேர்
ஐ.பி.எல் தொடரில் குஜராத் மற்றும் ஐதராபாத் அணிகள் இதுவரை 5 முறை நேருக்கு மோதி இருக்கின்றன. இதில் 4-ல் குஜராத்து அணியும், ஒன்றில் ஐதராபாத் அணியும் வெற்றி கண்டுள்ளன. இந்த சீசனில் மோதிய முந்தைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.