11-வது புரோ கபடி லீக் போட்டி ஐதராபாத்தில் கடந்த 18 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 29 ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்தத் தொடரில் 12 அணிகள் களமாடியுள்ளன. இதில், ஒவ்வொரு அணியும் தலா 22 ஆட்டத்தில் விளையாட வேண்டும்.
லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே -ஆப் சுற்றுக்கு முன்னேறும். லீக்கில் 'டாப்-2' இடங்களை வசப்படுத்தும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதும். அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில், புரோ கபடி லீக் தொடரில் குஜராத் ஜெயன்ட்ஸ் - யு மும்பா அணிகள் இடையேயான ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கத்தில் புதன்கிழமை (அக். 23) நடைபெற்றது.. இதில் குஜ்ராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி யு மும்பா வெற்றி பெற்றது.
இந்த சீசனின் தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணியை 36-32 என்ற கணக்கில் வீழ்த்திய கையுடன் குஜராத் ஜெயண்ட்ஸ் களமாடியது.. மறுபுறம், தபாங் டெல்லி கே.சி-க்கு எதிரான கடைசி ஆட்டத்தில் 28-36 என்ற கணக்கில் யு மும்பா தோல்வியுற்றது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு வெற்றிக் கணக்கை தொடங்க அந்த அணி ஆவலுடன் இருக்கும். அதனைத் தடுத்து, அடுத்த வெற்றியை ருசிக்க குஜராத் முயலும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது.
புரோ கபடி லீக் தொடரில் குஜராத் ஜெயன்ட்ஸ் - யு மும்பா அணிகள் இடையே விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், யு மும்பா அணி 33 புள்ளிகளைப் பெற்றது. குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 27 புள்ளிக்ளைப் பெற்றது. இதன் மூலம், 6 புள்ளிகள் வித்தியாசத்தில் குஜ்ராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி யு மும்பா வெற்றிக் கணக்கைத் தொடங்கியது.
நேருக்கு நேர்
புரோ கபடி லீக் வரலாற்றில் குஜராத் ஜெயண்ட்ஸ் - யு மும்பா அணிகள் 14 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் குஜராத் ஜெயண்ட்ஸ் 9 முறையும், யு மும்பா 4 முறையும் வென்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிந்தது.
இவ்விரு அணிகள் கடைசியாக மோதிய போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் 44-35 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“