worldcup 2023 | india-vs-bangladesh | hardik-pandya: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (வியாழக்கிழமை) புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் அரங்கேறும் 17வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாந்தோ முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி, இந்தியா பவுலிங் செய்து வருகிறது. இந்த நிலையில், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
/indian-express-tamil/media/post_attachments/948bd590-80b.jpg)
இந்த ஆட்டத்தில் 9வது ஓவரை வீச வந்த ஹர்திக், 3வது பந்தை தொடக்க வீரர் லிட்டன் தாஸுக்கு வீசினார். அந்த பந்தை அவர் பவுண்டரிக்கு விரட்டினார். பந்து ஆடுகளம் வழியாக ஹர்திக்கை கடந்து சென்ற நிலையில், அதனை தனது வலது காலால் தடுத்து நிறுத்த முயன்றார். அப்போது ஹர்திக் பாண்டியாவின் வலது கால் முன்பக்கமாக இழுக்க, இடதுகால் முழுவதுமாக மடங்கிய நிலையில், தடுமாறி கீழே விழுந்தார்.
இதன்பின்னர், ஹர்திக் வலியில் நெளிந்ததால் இந்தியாவின் பிசியோ வரவழைக்கப்பட்டார். ஹர்திக்கை சோதித்த அவர் ஸ்கேன் எடுக்க அறிவுறுத்தினார். பின்னர் உடனடியாக ஹர்திக் மைதானத்தில் இருந்து வெளியேறினார். தற்போது அவர் ஸ்கேன் எடுக்க அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயத்தின் தீவிரம் குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இதுவரை எந்த கருத்து தெரிவிக்கவில்லை. இருப்பினும், வங்கதேச அணிக்கு எதிரான இன்னிங்ஸ் முழுவதும் ஹர்திக் பீல்டிங் செய்ய மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இது உள் காயம் என்பதால் 120 நிமிடங்களுக்குப் பிறகு அல்லது 5 விக்கெட்டுகள் விழுந்த பிறகு அவரால் பேட்டிங் செய்ய முடியும். அந்த முடிவை அணி நிர்வாகம் தான் எடுக்கும்.
2019 உலகக் கோப்பைக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா முதுகில் காயம் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டும் வந்த பிறகும் அவர் ஆரம்பத்தில் பந்து வீசவில்லை. பின்னர் சில ஓவர்கள் மட்டுமே பந்துவீசினார். இந்த ஆண்டு ஐ.பி.எல்-லின் போது ஹர்திக் 16 ஆட்டங்களில் 25 ஓவர்கள் வீசி இருந்தார்.
நடப்பு உலகக் கோப்பை தொடரில் இதுவரை நடந்த 3 ஆட்டங்களில், ஹர்திக் பாண்டியா பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு விக்கெட்டுகள் உட்பட 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஹர்திக் வீசிய ஓவரில் 3 பந்துகள் மீதமிருந்த நிலையில், அதனை விராட் கோலி வீசினார். அப்போது அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் உற்சாகமாக ஆரவாரம் செய்தார்கள்.
/indian-express-tamil/media/post_attachments/375eeb99-7b0.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“