IND vs NZ, Hardik Pandya - Prithvi shaw Tamil News: நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3வது டி20 போட்டியில் 168 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. மேலும் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று அசத்தியது. இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் தொடக்க வீரர் வீரர் சுப்மன் கில், சதம் விளாசி அசத்தினார். மேலும், 63 பந்துகளை எதிர்கொண்ட கில் 12 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 126 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
கில் தனது அசத்தலான சதம் மூலம் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என்கிற மூன்று பார்மெட் கிரிக்கெட் போட்டியிலும் சதம் விளாசிய ஐந்தாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை கில் படைத்துள்ளார். மேலும், ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி கேப்டன் ஹர்திக் பாண்டியா தொடரின் நாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில், இந்த தொடருக்கான கோப்பை பெற்ற கேப்டன் பாண்டியா அதை பிருத்வி ஷா வசம் கொடுத்து மகிழ்வித்துள்ளார். இந்த சம்பவம் ரசிகர்களுக்கு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிசிசிஐ வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், ஹர்திக் பாண்டியா கோப்பையை சேகரிக்கிறார். பிறகு அவர் நேராக வீரர்களிடம் சென்று கோப்பையை பிருத்வி ஷாவிடம் கொடுக்கிறார். அவர் போட்டியில் விளையாடவில்லை என்றாலும், மிகவும் உற்சாகமாகத் தோன்றினார். ஹர்திக்கிடம் இருந்து கோப்பையை வாங்கிக்கொண்டு நடுவில் நின்று புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்ததில் பிருத்வி மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
சுவாரஸ்யமாக, நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு ஆட்டங்களில் தொடக்க வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ஷுப்மான் கில் பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை. அவர்களது இடத்தில் தொடக்க வீரர் பிருத்வி ஷா-வை களமிறக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்தனர். அவர்களுக்கு தொடர்ந்து 3வது போட்டியிலும் வாய்ப்பு கொடுத்த கேப்டன் பாண்டியா மற்றும் அணி நிர்வாகம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்கள். இந்த நிலையில், கேப்டன் பாண்டியா பிருத்வி ஷா வசம் கோப்பையை கொடுத்து அனைவருக்கும் அதிர்ச்சியூட்டி இருக்கிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil