ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 5 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதனையொட்டி மாநிலத்தில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், எதிர் வரும் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தியை சந்தித்துள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Ahead of Haryana Assembly polls, wrestlers Vinesh Phogat, Bajrang Punia meet Rahul Gandhi
இது தொடர்பான புகைப்படத்தை காங்கிரஸ் அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இருவரும் காங்கிரஸ் கட்சியின் அமைப்புப் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபாலைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும், அவர்களின் வேட்புமனு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாரிஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் முன்னேறினார். ஆனால் போட்டியன்று 50 கிலோவை விட 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் மனமுடைந்த அவர் மல்யுத்தப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இருப்பினும், வினேஷ் போகத்துக்கு வெள்ளி வென்றவருக்கான வெகுமதியும், மரியாதையும் வழங்கப்படும் என ஹரியானா மாநில அரசு தெரிவித்தது. தொடர்ந்து தாயகம் திரும்பிய அவருக்கு, டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குறிப்பாக, வினேஷ் போகத் இந்தியா திரும்பியதிலிருந்து, அவர் காங்கிரஸ் தலைவர்களுடன் காணப்பட்டார். அவரை வரவேற்க ரோஹ்தக் எம்.பி தீபேந்தர் ஹூடா டெல்லியில் உள்ள ஐ.ஜி.ஐ விமான நிலையத்திற்கு நேரில் சென்றார். அவர் வெற்றியின் சின்னமான ஹனுமான் கடவுடன் வரவேற்றார். இதேபோல், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அப்போதைய இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவரும், பா.ஜ.க தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் மேற்கொண்டபோது, எம்.பி தீபேந்தர் ஹூடா தனது ஆதரவை தெரிவித்தார்.
வினேஷ் போகத் ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவையும் சந்தித்தார், அவர் கட்சியில் சேர விரும்பும் அனைவரையும் காங்கிரஸ் வரவேற்கிறது என்று கூறினார்.
முன்னாள் பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்களின் மிக முக்கியமான முகங்களில் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் அடங்குவர்.
டெல்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டி (சி.இ.சி) கூட்டத்திற்குப் பிறகு, ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் வினேஷ் போகத் போட்டியிடுவது விரைவில் தெரியவரும் என்று ஹரியானாவின் ஏ.ஐ.சி.சி பொறுப்பாளர் தீபக் பபாரியா கூறினார். இருவரும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி ஆலோசித்துள்ளதாகவும், இன்னும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள். "சில அம்சங்களை சலவை செய்ய வேண்டும். பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, இருவரும் தேர்தலில் போட்டியிடுவார்களா இல்லையா என்பது விரைவில் அனைவருக்கும் தெரியும், ”என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“