அறிமுக போட்டிலேயே ஷாட்ரிக் விக்கெட் எடுத்து, கோப்பையை கைப்பற்ற உதவிய இலங்கை வீரர் மதுசங்காவிற்கு பாராட்டுக்கள் குவிகிறது.
இலங்கை, ஜிம்பாப்வே, பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்களுக்கான முத்தரப்பு கிரிக்கெட் போட்டி, பங்காளதேஷில் நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற இதன் இறுதி போட்டியில், இலங்கை அணி, பங்களாதேஷ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. டாக்காவில் நடைபெற்ற இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சொந்த மண்ணில் நடைபெறும் போட்டி என்பதால், கோப்பையை கைப்பற்ற பங்களாதேஷ் அணி தொடரின் ஆரம்பத்தில் இருந்தே ஆர்வம் காட்டியது. நேற்று நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்கத்தில் இருந்தே கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி, 50 ஓவரில், 221 ரன்கள் எடுத்திருந்தது. நட்சத்திர வீரர்களான உபுல் தாரங்கா (56), சண்டிமால்(45), டிக்வெல்லா(42) ரன்கள் எடுத்திருந்தனர். அதன் பின்பு, ஆடிய பங்களாதேஷ் அணி, ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். போட்டி முடிவில், பங்களாதேஷ் அணி, 41.1 ஓவரில், 142 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகினர்.
இந்த போட்டியில், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இலங்கை அணியைச் சேர்ந்த, அறிமுக வீரரான வேகப்பந்து வீச்சாளர் மதுசங்கா. இவருக்கு, இது அறிமுக போட்டியாகும். மதுசங்காவின் அசாத்தியமான பந்து வீச்சால், பங்களாதேஷ் அணியை சேர்ந்த முன்னணி வீரர்களான, முர்டாசா, ரூபல்,மஹ்மத்துல்லா அவுட் ஆகினர். மதுசங்காவின் இந்த ஹாட்ரிக் விக்கெட்டால் இலங்கை அணி எளிதாக கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம், மதுசங்காவிற்கு இலங்கை அணியைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் நிர்வாகம் தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 22 வயதாகும் மதுசங்கா, பல உள்ளூர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இலங்கை அணிக்கு மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் கிடைத்திருப்பதாகவும் அந்த அணியின் கேப்டன், சண்டிமால் தெரிவித்துள்ளார்.