India vs England | Visakhapatnam: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை முதல் தொடங்கி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் இந்தியாவை 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 1-0 என்கிற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏ.சி.ஏ - வி.டி.சி.ஏ கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை முதல் நடக்க உள்ளது.
முந்தைய டெஸ்ட் போட்டிகளில் விசாகப்பட்டினத்தில் இந்தியா எப்படி செயல்பட்டுள்ளது?
இங்கிலாந்து அணி கடைசியாக 2021 இல் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்தபோது, சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்தனர். இருப்பினும், அங்கு நடந்த 2வது போட்டியில் மீண்டு அதிரடி கம்பேக் கொடுத்தனர். அத்துடன் தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றினர்.
அந்த வகையில், நடந்து வரும் இங்கிலாந்து எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா எழுச்சி பெற கடுமையாக போராடும். எனவே, அனைவரின் கவனமும் விசாகப்பட்டினம் பக்கம் திரும்பியுள்ளது.
விசாகப்பட்டினம் மைதானத்தில் இந்தியா இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதில் முதலாவது 2016ல் இங்கிலாந்துக்கு எதிராகவும், இரண்டாவது 2019ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் நடந்து.
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் சுருக்கம்
2016ல் இந்தியா 246 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. தனிப்பட்ட காரணங்களுக்காக தற்போது நடைபெற்று வரும் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத விராட் கோலி அப்போதைய ஆட்டத்தில் ஆட்ட நாயகனாக இருந்தார். இந்திய அணிக்கு முதல் இன்னிங்ஸில் 167 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 81 ரன்களையும் எடுத்தார்.
கோலியைத் தவிர, ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டியில் முக்கிய பங்களிப்பை செய்துள்ளார். மூத்த சுழற்பந்து வீச்சாளர் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியாவுக்கு பெரும் முன்னிலை அளிக்க உதவினார். இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கவும் உதவினார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தின் சுருக்கம்
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில், இந்திய அணி 206 ரன்கள் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோகித் சர்மா இரு இன்னிங்சிலும் சதம் அடித்தார். முதல் இன்னிங்சில் 176 ரன்கள் எடுத்தார், இரண்டாவது இன்னிங்சில் 127 ரன்கள் எடுத்தார். மீண்டும் அஸ்வின் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சாளர்களின் தேர்வாக இருந்தார்.
ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுலுக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த இடத்தில் இந்தியா முறியடிக்க முடியாத சாதனையை படைத்துள்ளது.
2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணைகேப்டன்), அவேஷ் கான், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், வாஷிங்டன் சுந்தர், சவுரப் குமார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IND vs ENG: How did India do at Dr. Y.S. Rajasekhara Reddy ACA-VDCA Cricket Stadium in Visakhapatnam in previous Test matches?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“