பி.சி.சி.ஐ-யின் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் சேலஞ்சர் போட்டி வைபவ் சூரியவன்ஷியின் கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியமைத்த போட்டி எனலாம். விவிஎஸ் லட்சுமண் அவரது ஆட்டத்தால் ஈர்க்கப்பட்டு இங்கிலாந்து மற்றும் வங்கதேசத்திற்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான தொடருக்கு அவரைத் தேர்ந்தெடுத்தார்.
வைபவ் சூர்யவன்ஷி.. 14 வயசு பையனை ரூ.11 கோடிக்கு ராஜஸ்தான் ராயல் அணி ஏலத்தில் எடுத்தபோது பலருக்கும் புருவங்கள் உயர்ந்தது. யார்டா.. இந்த பையன் என்ன பண்ணியிருக்கான்... என வரலாறு தேடியபோதுதான் சென்னையில் நடந்த Under-19 டெஸ்ட் மேட்ச்ல ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 58 பந்துகளில் செஞ்சூரி அடித்த அசத்தியது. 12-வயசுல டெஸ்ட் கிரிக்கெட் அறிமுகம் என ரெக்கார்ட் பெருசா இருந்தது. இனி என்ன பண்ணப்போறான்னு எதிர்ப்பார்த்து காத்திருந்தவர்களுக்கு நேற்று செமத்தியான விருந்து படைந்திருக்கிறார் இந்த பீகார் சூறாவளி.!
ஐபிஎல் கிரிக்கெட்டை “ சிக்ஸர்” உடன்தான் தொடங்கினார் இந்த இளம் சூறாவளி. லக்னோவுக்கு எதிராக போட்டியில் அறிமுகமான சூரியவன்ஷி முதல் பந்தை சிக்ஸருக்கு அனுப்பி தனது எண்ட்ரியை பதிவு செய்தார். அப்போதே யாருடா.. இந்த பையன் என பலரும் மெய்சிலிர்த்தனர். குஜராத் டைட்டன்ஸ் எதிராக நேற்று சூர்யவன்ஷி ஆடியது எல்லாம் வேற லெவல் ரகம். வயசுக்கும் அந்த ஆட்டத்துக்கும் சம்பந்தமே இல்லை.
நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சுப்மன் கில் 84, பட்லர் 54 ரன்கள் என அடிக்க குஜராத் அணி 20 ஒவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. ஆனால் யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள் 14 வயசு பையன் எல்லாத்தையும் மாற்றப்போகிறான் என்று.
முகமது சிராஜ், இஷாந்த் சர்மா, பிரசித் கிருஷ்ணா, ரஷீத் கான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் போன்றவர்களை வீழ்த்தி ஐ.பி.எல்-லில் சதமடித்த இளைய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் சூரியவன்ஷி. நேற்று ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடியது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இன்னிங்ஸ். உண்மையில் நேற்றைய போட்டியை தவறவிட்டவர்கள் மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் அந்த போட்டியை பாருங்கள். ரன் மழையில் 15.5 ஓவர்களில் 212 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. அற்புதமான ஃபுட் வொர்க் அவ்வளவு அழகான கிரிக்கெட் ஷாட்கள். 14 வயது சிறுவனின் பேட்டில் இருத்து அத்தனை அற்புதமான ஷாட்கள்.
“ஒரு ஆட்டத்தில் வைபவ் சூரியவன்ஷி 36 ரன்களுக்கு ரன்அவுட் ஆனார். அதனால், அவர் டிரஸ்ஸிங் ரூமில் அழத்தொடங்கினார். இதைப்பார்த்த லட்சுமண், அவரிடம் வந்து, ‘இங்கே ரன்களை மட்டும் பார்க்கவில்லை. நீண்ட ரன் எடுக்கும் திறமை உள்ளவர்களை நாங்கள் பார்க்கிறோம் என்றார். சூரியவன்ஷி திறமை கண்டறிந்த லட்சுமண், பிசிசிஐ அவருக்கு ஆதரவளித்து உள்ளது என்று அவரது பயிற்சியாளர் மனோஜ் ஓஜா ஸ்போர்ட்ஸ்டாரிடம் தெரிவித்தார். தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய பயிற்சியாளர், சூரியவன்ஷி தனது தொழில் வாழ்க்கையின் நலனுக்காக பீகாரிலிருந்து வெளியே அழைத்துச் செல்ல விரும்புவதாகப் பேசியிருந்தார்.
"பீகார் கிரிக்கெட் வீரர்களுக்கு ஏற்றதல்ல. யாருக்கும் கவலை இல்லை. பிசிசிஐயும் அதைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்தி விட்டது. ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும்போது இது கடினமாகி வருகிறது," என்று வைபவ் சூர்யவன்ஷியின் பயிற்சியாளர் மனோஜ் ஓஜா தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்திருந்தார்.
"ஒரு பயிற்சியாளராக, அவர் உடனடியாக பீகாரை விட்டு வேறு மாநிலத்திற்காக விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சிறந்த ரஞ்சி அணிகள் அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அதை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவருக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் ஒரு மாநிலத்திற்காக விளையாட வேண்டும்." என்றார்.
வைபவ் சூரியவன்ஷியின் பெயரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு லக்ஷ்மண் பரிந்துரை செய்ததை இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டிருந்தது. டிராவிட் அவரை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து இந்த ஐபிஎல்லில் அவருக்கு ஒரு ஆட்டத்தை வழங்க தனது நேரத்தை எடுத்துக் கொண்டார்.
“அவர் மிகவும் நன்றாக பயிற்சி செய்கிறார், அவர் மிகவும் நல்ல மற்றும் உற்சாகமான திறமைசாலியாகத் தெரிகிறார், ஆனால் அதே அளவு நல்ல வீரர்களும் இருக்கிறார்கள், அவரை நன்றாக வளர்ப்பது, சூழலில் அவருக்கு சிறிது நேரம் கொடுப்பது, அவர் அதற்குப் பழகி வீரர்களுடன் பயிற்சி செய்வது, சூழலை உணர வைப்பது எங்கள் பொறுப்பின் ஒரு பகுதியாகும். இவை அனைத்தும் அவருக்கு சிறந்த அனுபவங்கள். எனவே இது ஒரு வீரரை வளர்ப்பதில் நாம் பின்பற்றும் செயல்முறையின் ஒரு பகுதியாகும், ஒரு வாய்ப்பு கிடைத்தால் அவரை விளையாட நாங்கள் பயப்பட மாட்டோம்,” என்று மார்ச் 30 கூறியிருந்தார்.