9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் வருகிற பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
பிப்ரவரி 19 ஆம் தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும், முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரின் முக்கியமான இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் பிப்ரவரி 23 ஆம் தேதி அமீரகத்தில் உள்ள துபாயில் நடக்க உள்ளது. இந்தப் போட்டிக்கு முன் பிப்ரவரி 20 ஆம் தேதி வங்கதேசத்தையும், மார்ச் 2 ஆம் தேதி நியூசிலாந்தையும் இந்திய அணி எதிர்கொள்கிறது.
ஆமை வேகத்தில் பாகிஸ்தான்
இந்நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடர் தொடங்க இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள சூழலில், தொடரை நடத்தும் பாகிஸ்தான் அதன் ஸ்டேடியங்கள் சீரமைப்பு பணிகளை இன்னும் முழுமையாக முடிக்கவில்லை. மைதானத்தில் பார்வையாளர்கள் அமரும் பகுதிகளின் கட்டுமான மற்றும் மேம்படுத்தும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
கராச்சியில் உள்ள தேசிய ஸ்டேடியம், லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியம் மற்றும் ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகியவற்றில் கட்டுமானம் மற்றும் மேம்படுத்தும் பணிகள் இன்னும் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட ஸ்டேடியம் பணிகள் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, பிப்ரவரி 12 ஆம் தேதிக்குள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி) ஒப்படைக்க வேண்டும். ஆனால், சீரமைப்பு பணிகள் இன்னும் பகுதியளவு கூட முடிக்கப்படவில்லை.
லாகூர் மற்றும் கராச்சி ஆகிய இரண்டு ஸ்டேடியங்களில் பெரிய அளவிலான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பார்வையாளர்கள் அமரும் இடங்கள், ட்ரெஸ்ஸிங் ரூம்கள் மற்றும் விருந்தினர் பாக்ஸ்கள் இன்னும் இறுதி கட்டத்தை எட்டவில்லை. கூடுதலாக, வேலி அமைக்கும் பணி, ஃபிட்லைட்கள் மற்றும் இருக்கைகளுக்கு பெயிண்ட் அடித்தல் என கட்டுமான பணிகள் வெகு தொலைவில் உள்ளது. மேலும் மிகப் பெரிய தடையாக இருக்கப் போவது காலநிலையாகும். இது கட்டுமானம் மற்றும் முடிக்கும் வேலைகள் வேகத்தைக் கூட்டுவதற்கு கடினமாக இருக்கும்.
ஒரு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி உட்பட சில முக்கிய போட்டிகளை நடத்தும் (இந்தியா தகுதி பெறவில்லை என்றால்) கடாபி ஸ்டேடியத்தில் பணிகள் பாதியளவு தான் நடந்துள்ளளது. அதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு (பி.சி.பி) கூடுதல் நேரம் வேலை செய்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. இந்த அவசர வேலைகளால் வீரர்களின் பாதுகாப்பில் சமரசம் செய்யாமல் இருப்பதை உறுதி செய்யும் இடத்தில் இருக்கும் ஐ.சி.சி, சீரமைப்பு பணி தொய்வு காரணமாக பெரும் கவலை அடைந்துள்ளது.
🚨 The current condition of Gaddafi Stadium, Lahore, 44 days before the Champions Trophy.
— Ahtasham Riaz (@ahtashamriaz22) January 7, 2025
- Lahore will host its first match on 22nd February, featuring Australia vs England. #ChampionsTrophy #PakistanCricket pic.twitter.com/VrzcBwnu2D
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.