ஆங்கிலேயர்கள் கிரிக்கெட் கண்டுபிடித்ததில் இருந்து, ஆட்டம் போடுவதற்கு முன்பு டாஸ் போடும் முறை பழக்கத்தில் உள்ளது. 'ஹெட்ஸ்'... 'டைல்ஸ்' என்று தான் கேப்டன்கள் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால், இந்த டாஸ் போடும் முறையை முடிவுக்கு கொண்டுவரலாமா என்பது குறித்து ஐசிசி தீவிரமாக ஆலோசித்து வருகிறது. குறிப்பாக, அடுத்து ஆண்டு தொடங்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து, டெஸ்ட் போட்டிகளில் இருந்து டாஸ் போடும் முறையை நீக்கலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
டெஸ்ட் தொடர்களின் போது, உள்ளூர் அணி, தங்களுக்கு ஏற்றவாறு தான் பெரும்பாலும் பிட்சை அமைத்துக் கொள்ளும். ஆசிய கண்டத்தின் அணிகள் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றவாறும், இதர வெளிநாட்டு அணிகள் தாறுமாறாக எகிறும் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்றவாறு பிட்சை வடிவமைத்துக் கொள்ளும். இதனால், எப்பேற்பட்ட பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும், வெளிநாட்டுத் டெஸ்ட் தொடர்களில் தடுமாறும் நிலை ஏற்படுகிறது. அப்படி, ஒன்-சைட் கேமாக ஆட்டம் அமையக் கூடாது என்பதற்காகவே, டாஸ் போடும் முறையை நீக்க ஐசிசி ஆலோசித்து வருகிறது.
அப்படி ஒருவேளை டாஸ் முறை நீக்கப்பட்டால், அந்நிய நாட்டின் கேப்டன் தான் தங்கள் அணி பேட்டிங் அல்லது பவுலிங் தேர்வு செய்யப் போகிறதா என்று முடிவு செய்ய வேண்டும். உள்ளூர் அணி கேப்டன் அவ்வாறு முடிவு எடுக்க முடியாது.
வரும் மே28, 29 தேதிகளில் மும்பையில் நடைபெறும் ஐசிசி கிரிக்கெட் ஆலோசனை கமிட்டிக் கூட்டத்தில் இதுகுறித்த முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.