ICC U19 World Cup அரை இறுதிக்கு இந்திய அணி முன்னேறியது. கால் இறுதிப் போட்டியில் வங்க தேசத்தை வீழ்த்திய இந்தியா, 30-ம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது.
ICC U19 World Cup நியூசிலாந்தில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் இன்று காலிறுதி ஆட்டம் நடந்தது. இதில் இந்தியா- வங்க தேசம் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 49.2 ஓவர்களில் 265 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான பிரித்வி ஷா (40 ரன்கள்), 2-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ஷுப்மான் கில் (86 ரன்கள்), விக்கெட் கீப்பர் ஹர்விக் தேசாய் (34 ரன்கள்), அபிஷேக் சர்மா (50 ரன்கள்) குறிப்பிடத்தக்க அளவில் பங்களிப்பை செய்தனர்.
45 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்களை எடுத்திருந்த இந்திய அணி, அடுத்த 5 ஓவர்களுக்குள் 34 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை தாரை வார்த்ததால் எதிர்பார்த்த அளவுக்கு ரன் எண்ணிக்கை கூடவில்லை. ஆனால் பின்னர் பந்து வீச்சாளர்கள் அந்தக் குறையைப் போக்கினர்.
42.1 ஓவர்கள் விளையாடிய வங்க தேசம் அணி 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பினாக் கோஷைத் (43 ரன்கள்) தவிர, வேறு யாரும் 20 ரன்களைத் தாண்டவில்லை. இதனால் 131 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி ஜெயித்தது. இந்த வெற்றியின் மூலமாக அரை இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது. இந்திய சுதந்திர தினத்தன்று கிடைத்த இந்த வெற்றியை இளம் இந்திய வீரர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதினர்.
இந்தியா வருகிற 30-ம் தேதி அரை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. அந்தப் போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.