Border - Gavaskar trophy 2023, Ravindra Jadeja Tamil News: இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நாக்பூரில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 63.5 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் வீரர்கள் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். சுழற்பந்து வீச்சிற்காக நாக்பூர் ஆடுகளம் தயார் செய்யப்பட்ட நிலையில், இந்திய சுழல் மன்னர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா தங்களின் அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினர். அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் சாய்த்து அசத்தியுள்ளனர்.
ஸ்மித் கிளீன் போல்ட்: அதிர்ச்ச்சி கொடுத்த ஜடேஜா
இந்த ஆட்டத்தின் போது ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் – உஸ்மான் கவாஜா களமிறங்கினர். இந்த ஜோடியில் ஒரு ரன் எடுத்த உஸ்மான் கவாஜா சிராஜ் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். ஷமி வீசிய 2.1 பந்தில் ஒரு ரன் எடுத்த டேவிட் வார்னர் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.
இதன்பிறகு, ஸ்டீவன் ஸ்மித் - மார்னஸ் லாபுசாக்னே ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியில் அரைசதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மார்னஸ் லாபுசாக்னே ஜடேஜா வீசிய 35.5 பந்தில் 49 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு வந்த மாட் ரென்ஷா, ஜடேஜா வீசிய அடுத்த பந்திலே எல்பிடபிள்யூ ஆகி வந்த வேகத்தில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிவு இருந்தாலும் களத்தில் நிதமான விளையாடி அவ்வப்போது பவுண்டரிகளை விரட்டிக்கொண்டிருந்தார் ஸ்மித். அவர் 107 பந்துகளில் 7 பவுண்டரிகளை அடித்து 37 ரன்கள் எடுத்த நிலையில், ஜடேஜாவின் (41.6) பந்தில் கிளீன் போல்ட் அவுட் ஆனார். ஜடேஜா வீசிய அந்த பந்து ஸ்மித்திற்கு முன் குத்தி திரும்பி ஸ்டம்புகளை பதம் பார்த்தது. இதை சற்றும் எதிர்பாராத ஸ்மித் திகைத்து போய் நின்றார். ஸ்மித் கிளீன் போல்ட் அவுட் ஆன இந்த வீடியோ சமூக வலைதளத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
செம்ம ஃபார்முடன் மீண்டு வந்த ஜடேஜா
இந்திய ஆல்ரவுண்டர் வீரரான ஜடேஜாவுக்கு ஆசிய கோப்பை தொடரின் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதனால் அவர் தொடரின் பாதியிலே வெளியேறும் நிலை வந்தது. அதன்பிறகு அவர் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். அதன் காரணமாக அவரால் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டி20 உலகக் கோப்பையில் கலந்து கொள்ள முடியவில்லை. அவர் நல்ல உடற்தகுதியை எட்டியிருந்த போதும், வங்கதேசம் மற்றும் சொந்த மண்ணில் நடந்த இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
இதன்பிறகு இந்தியாவில் நடந்து வரும் உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடினார். ஒரு போட்டியில் சவுராஷ்டிரா அணியை வழிநடத்திய அவர் சென்னையில் தமிழக அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் ஒரு இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
இந்த நிலையில், இன்று தொடங்கிய முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் அவர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளர். மேலும், தனது தரமான கம்பேக்கையும் கொடுத்துள்ளார் சர்.ஜடேஜா.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil