மெல்போர்ன் டெஸ்ட் கிரிக்கெட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் எடுத்தது. புஜாரா சதம்(106) விளாசியிருந்தார். விராட் கோலி 82 ரன்கள் எடுத்திருந்தார்.
தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா, தனது முதல் இன்னிங்ஸில் 151 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பும்ரா 6 விக்கெட்டுகளை அள்ளினார். ஷான் மார்ஷ், டிராவிஸ் ஹெட், டிம் பெய்ன் போன்ற பெரிய தலைகளை காலி செய்து ஆஸ்திரேலியாவின் பேட்டிங்கை பும்ரா ஆட்டம் காண வைத்தார். பும்ராவின் ஸ்லோ யார்க்கர், ஷார்ட் பிட்ச் பந்துகளில் அரண்டு போனது ஆஸ்திரேலிய பேட்டிங் லைன்-அப்.
ஆனால், 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. புஜாரா, கோலி ஆகிய இருவரையும் ௦ ரன்னில் வெளியேற்றினார் பேட் கம்மின்ஸ்.
நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 5 விக்கெட் 54 ரன்கள் எடுத்திருந்தது. மாயங்க் அகர்வால் 28 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
தொடர்ந்து, இன்று நான்காம் நாள் ஆட்டத்தில் களமிறங்கிய இந்திய அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால், ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், இரண்டாம் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு ஆரம்பே தடுமாற்றமாக அமைந்தது. ஆரோன் ஃபின்ச் 3 ரன்னில் பும்ரா ஓவரில் அவுட்டாக, மார்க்ஸ் ஹாரிஸ் 13 ரன்னில் ஜடேஜாவிடம் வீழ்ந்தார். ஓரளவிற்கு தாக்குபிடித்த உஸ்மான கவாஜா 33 ரன்களில் ஷமி ஓவரிலும், 44 ரன்கள் எடுத்திருந்த ஷான் மார்ஷ் பும்ரா ஓவரிலும் எல்பிடபிள்யூ ஆனார்கள்.
விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தாலும், பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் சிறப்பாடி ஆடி 103 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார். அவருக்கு பக்கபலமாக நாதன் லயன் 38 பந்துகளை சந்தித்து 6 ரன்கள் மட்டும் எடுத்து ஆடி வருகிறார்.
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்துள்ளது
கைவசம் 2 விக்கெட்டுகளே மீதமுள்ளன. வெற்றிக்கு 141 ரன்கள் தேவை. இந்தியாவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.
மேலும் படிக்க - "இவனுக்கு பேசுறத தவிர ஒன்னும் தெரியாது" - ரிஷப் பண்ட்டின் மரண கலாய்! நொந்து போன ஆஸி., கேப்டன்