IND vs ENG, 2nd Test Highlights: பதிலடி கொடுத்த இந்தியா... 336 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை சாய்த்து அபாரம்!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
India won match

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, லீட்சில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் கடந்த புதன்கிழமை மாலை 3:30 மணி முதல் தொடங்கி நடைபெற்றது. 

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்

பும்ரா ஓய்வு 

Advertisment

இந்தப் போட்டியில் இருந்து மூத்த வீரர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு கொடுத்திருப்பதாக இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். இதேபோல், முந்தைய போட்டியில் ஆடிய சாய் சுதர்சன், ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டு நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் ஆகிய மூவர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முதல் நாள் ஆட்டம்: டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் - இந்தியா பேட்டிங் 

இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆடியது. இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கே.எல் ராகுல் ஜோடி சிறப்பாக மட்டையைச் சுழற்ற நினைத்த நிலையில், ராகுல் 2 ரன்னுக்கு அவுட் ஆகி வெளியேறினார்.  இதன்பிறகு ஜெய்ஸ்வால் - கருண் நாயர் ஜோடி சேர்ந்த சூழலில், 5 பவுண்டரியை விரட்டிய கருண் நாயர் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனிடையே, சிறப்பாக பேட்டிங் ஆடிய ஜெய்ஸ்வால் 59 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

தொடர்ந்து, ஜெய்ஸ்வால் - கேப்டன் கில் ஜோடி அமைத்தனர். இருவரும் விக்கெட் சரிவை திறம்பட மீட்டனர். இவர்களின் பார்ட்னர்ஷிப்பில் 50 ரன்களுக்கு மேல் வந்தன. இந்த ஜோடியில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 107 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகினார். அதைத் தொடர்ந்து, கேப்டன் கில் - ரிஷப் பண்ட் ஜோடி கரம் கோர்த்தனர். இவர்களில் ரிஷப் பண்ட் 42 பந்துகளில் 25 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.

Advertisment
Advertisements

அதன் பின்னர், களமிறங்கிய நிதிஷ் குமாரும் 6 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜடேஜா களமிறங்கினார். இதனிடையே, தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய  சுப்மன் கில் சதம் விளாசினார். 216 பந்துகளில் 114 ரன்களை அவர் குவித்தார். மறுபுறம், 67 பந்துகளில் 41 ரன்களை ஜடேஜா குவித்தார். இவர்கள் இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 85 ஓவர்களில் 310 ரன்களை குவித்தது.

2-ம் நாள் ஆட்டம் - இந்தியா பேட்டிங் 

தொடர்ந்து 2-ம் நாள் ஆட்டத்தில் களத்தில் இருந்த கேப்டன்  சுப்மன் கில் - ஜடேஜா ஜோடி சிறப்பாக மட்டையைச் சுழற்றினர். இருவரும் இணைந்து 200 ரன்களுக்கு மேல் குவித்தனர். இந்த ஜோடியை உடைக்க இங்கிலாந்து பவுலர்கள் கடுமையாக போராடினர். கில் 150 ரன்களை கடக்க, ஜடேஜா அரைசதம் அடித்து அசத்தினார். அவர் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், 137 பந்துகளில் 10 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 89 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

இதன்பிறகு களம் புகுந்த வாஷிங்டன் சுந்தர், கேப்டன் கில் உடன் ஜோடி அமைத்தார். இந்த ஜோடி தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் கேப்டன் கில் 311 பந்துகளில் இரட்டை சதம் விளாசி மிரட்டினார். அவரது விக்கெட்டை கைப்பற்றி இங்கிலாந்து பவுலர்கள் தீவிரமாக முயற்சித்து முயற்சித்தும், அவர்களுக்கு எளிதில் பலன் கிடைக்கவில்லை. கில்லுக்கு ஒத்துழைப்பு கொடுத்த வாஷிங்டன் சுந்தர், தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஏதுவான பந்துகளை மட்டும் அடித்து ஆடி ரன்கள் சேர்த்தார்.

இந்த செய்தி ஆங்கிலத்தில் படிக்கவும் 

மறுமுனையில் சிறப்பாக விளையாடிய சுப்மான் கில், 250 ரன்களை கடந்து அசத்திய நிலையில், அரைசதத்தை நெருங்கிய வாஷிங்டன் சுந்தர் 103 பந்துகளில் 3 பவுண்டரி ஒரு சிக்சருடன் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அணியின் ஸ்கோர் 574 ரன்களை எட்டியபோது சுப்மான் கில்லும் ஆட்டமிழந்தார் 387 பந்துகளை சந்தித்த அவர், 30 பவுண்டரி, 3 சிக்சருடன் 269 ரன்கள் குவித்து வெளியேறினார். அடுத்து வந்த ஆகாஷ் தீப் 6, சிராஜ் 8 ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், இந்திய அணி முதல் இன்னிங்சில், 587 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில், பஷீர் 3 விக்கெட்டுகளும், தங்க், வோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும், ஸ்டோக்ஸ் கார்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இங்கிலாந்து பேட்டிங்:

இதனைத் தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு, 3-வது ஓவரை வீசிய இந்திய வீரர் ஆகாஷ் தீப் இரட்டை செக் வைத்து அசத்தினார். இந்த ஓவரில் 4-வது பந்தில் டக்கெட், 5-வது பந்தில் ஒல்லி போப் ஆகியோர் ரன் கணக்கை தொடங்காமலே வெளியேறினர். அடுத்து தொடக்க வீரர் க்ளாரவ்லி 30 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2-வது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்தது. ரூட் 18 ரன்களும், புரூக் 30 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணி இந்திய அணியை விட, 510 ரன்கள் பின்தங்கி இருந்தது. 

3-ம் நாள் ஆட்டம் - இங்கிலாந்து பேட்டிங்:

வெள்ளிக்கிழமை 3-ம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்ற  நிலையில், களத்தில் இருந்த ஜோ ரூட் - ஹாரி புரூக் ஜோடியை சிராஜ் உடைத்தார். 2 பவுண்டரியை விரட்டிய ரூட் 22 ரன்னுக்கு நடையைக் கட்டினார். அடுத்து வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சிராஜ் பந்தில் கேட்ச் கொடுத்தது டக்-அவுட் ஆகி வெளியேறினார். அபாரமாக ஆடிய ஹாரி புரூக் - ஜேமி ஸ்மித்  ஜோடி இருவரும் சதம் அடித்து மிரட்டனர். இந்த ஜோடி தங்களது தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இதில், ஹாரி புரூக் 234 பந்துகளில் 158 ரன்கள் எடுத்தார். 

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்

அதன் பின்னர், களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் ரன்கள் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். இதேபோல், கிறிஸ் வோக்ஸ் 5 ரன்களில் நடையைக் கட்டினார். மறுபுறம், ஜேமி ஸ்மித் மட்டும் 207 பந்துகளில் 184 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங்கு, சோயிப் பஷீர் ஆகியோர் முகமது சிராஜ் பந்துவீச்சில் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அபாரமாக பந்து வீசிய சிராஜ் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆகாஷ் தீப் தனது பங்கிற்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதனால், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 407 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியா பேட்டிங்  

இதைத் தொடர்ந்து, இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.எல். ராகுல் 28 ரன்களுடனும், கருண் நாயர் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி 13 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்களை குவித்தது. மேலும், 244 ரன்களுடன் இந்தியா முன்னிலை வகித்தது. 

4ம் நாள் ஆட்டம் - இந்தியா பேட்டிங்  

சனிக்கிழமை 4 -ம் நாள் ஆட்டம் தொடங்கி நடந்த நிலையில், களத்தில் இருந்த கே.எல் ராகுல் - கருண் நாயர் ஜோடியில் கருண் நாயர் 26 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு வந்த கேப்டன் கில் ராகுலுடன் ஜோடி அமைத்தார். இதில் அரைசதம் அடித்த ராகுல், 10 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவருக்குப் பின் வந்த ரிஷப் பண்ட் அதிரடியாக அரைசதம் அடித்து அசத்தினார். 58 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 65 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். 

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்

கேப்டன் கில் - ஜடேஜா ஜோடி அதிரடியாக ஆடினர். மிகச் சிறப்பாக மட்டையைச் சுழற்றிய கேப்டன் கில் 162 பந்துகளில் 161 ரன்கள் குவித்து சோயிப் பஷீர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனிடையே, நிதிஷ் குமாரும் 1 ரன்னில் வந்த வேகத்தில் நடையை கட்டினார். மறுபுறம், 118 பந்துகளில் 69 ரன்கள் குவித்த ஜடேஜாவும், 7 பந்துகளில் 12 ரன்கள் அடித்த வாஷிங்டன் சுந்தரும் இறுதிவரை களத்தில் இருந்தனர். அந்த வகையில் தனது இரண்டாவது இன்னிங்ஸில் 83 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 427 ரன்களை குவித்த இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

அதன்படி, இங்கிலாந்து அணியில் இருந்து தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் க்ராலி மற்றும் பென் டக்கெட் ஆகியோர் களமிறங்கினர். இதில், ஜாக் க்ராலி ரன்கள் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். பென் டக்கெட் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, ஒல்லி போப் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் களமிறங்கினர்.

இதில், ஜோ ரூட் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆகாஷ் தீப் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர், ஹாரி புரூக் இறங்கினார். இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்துள்ளது. ஒல்லி போப் 24 ரன்களுடனும், ஹாரி புரூக் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

5-வது நாள் ஆட்டம்: 

5-ம் மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்ற நிலையில், ஒல்லி போப் 50 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர், ஹாரி புரூக்கும் 31 பந்துகளில் 23 ரன்களுடன் வெளியேறினார். இதனால் இங்கிலாந்து அணி தடுமாறியது.

எனினும், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜெமி ஸ்மித் ஆகியோர் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, அணியை தோல்வியில் இருந்து காப்பாற்ற ஜேமி ஸ்மித் கடுமையாக போராடினார். மறுபுறம், பென் ஸ்டோக்ஸ் 33 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

இதற்கு அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். அந்த வகையில், கிறிஸ் வோக்ஸ் 7 ரன்களிலும், பிரைடன் கார்ஸ் 38 ரன்களிலும், ஜோஷ் டங்கு 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சிறப்பாக ஆடிய ஜேமி ஸ்மித், 88 ரன்கள் எடுத்த நிலையில், அவரது விக்கெட்டை ஆகாஷ் தீப் கைப்பற்றினார். இதனால் இங்கிலாந்து அணி 68.1 ஓவர்களில் 271 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் 336 ரன்களுக்கு இந்தியா அபார வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் முதல் போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது.

இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்: 

இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், கருண் நாயர், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

இங்கிலாந்து: ஜாக் க்ராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங்கு, சோயிப் பஷீர். 

India Vs England

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: