India vs New Zealand, 2nd T20I, Lucknow pitch Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியிடம் பறிகொடுத்தது. தற்போது அந்த அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நடந்த 2-வது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தின் போது ஆடுகளம் மிகவும் மந்தமாக இருந்ததைத் தொடர்ந்து, லக்னோவின் ஏகானா ஸ்டேடியத்தின் பிட்ச் கியூரேட்டர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்க (UPCA) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆட்டத்திற்குப் பிறகு ஆடுகளம் குறித்து பேசிய இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா, "விக்கெட்டு அதிர்ச்சி" என்று குறிப்பிட்டார். ஏன்னென்றால், இந்த ஆட்டத்தில் மொத்தமாக வீசப்பட்ட 39.5 ஓவர்களில் 30 ஓவர்களை சுழற்பந்து வீச்சளர்கள் வீசினர். 200 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.
முன்னதாக, ராஞ்சியின் ஜேஎஸ்சிஏ ஸ்டேடியத்தில் உள்ள ஆடுகளத்தின் நிலை குறித்து பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, அதன் நிலை குறித்தும் அதிருப்தி தெரிவித்து இருந்தார். இங்கு நடந்த ஆட்டத்தில் இந்தியா 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. “நாங்கள் இதுவரை விளையாடிய இரண்டு ஆட்டங்களும் (ஆடுகளங்கள்) அதிர்ச்சியூட்டக்கூடியவையாக இருந்தன. கடினமான விக்கெட்டுகளை நான் பொருட்படுத்தவில்லை. அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் இந்த இரண்டு விக்கெட்டுகளும் டி20க்காக உருவாக்கப்பட்டவை அல்ல. கியூரேட்டர்கள் நாங்கள் விளையாடப் போகும் மைதான ஆடுகளங்களை முன்னதாகவே தயார் செய்வதை உறுதி செய்ய வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இருப்பினும், "கியூரேட்டர் விளையாட்டிற்காக இரண்டு கருப்பு மண் ஆடுகளங்களை முன்கூட்டியே தயார் செய்துள்ளனர். இருப்பினும், போட்டிக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் அணி நிர்வாகத்தின் கடைசி நிமிட வேண்டுகோளின் பேரில், அதற்கு பதிலாக சிவப்பு மண்ணால் செய்யப்பட்ட புதிய ஆடுகளத்தை தயார் செய்யுமாறு கியூரேட்டரிடம் கேட்கப்பட்டது. புதிய ஆடுகளத்தை குறுகிய அறிவிப்பில் போதுமான அளவில் தயாரிக்க முடியவில்லை. இது மந்தமான நிலைமைகளுக்கு வழிவகுத்துள்ளது." என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தைத் தொடர்ந்து பிட்ச் க்யூரேஷன் கடுமையான விமர்சனங்களுக்கு உட்பட்டது. இந்திய அணி பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே நிலைமைகள் குறித்து கேட்டபோது பாண்டியாவின் கவலைகளை எதிரொலித்தார். "அந்தக் கேள்விக்கு (ஆடுகளத்தில்) பதிலளிக்க சரியான நபர் கியூரேட்டர்". நடுவில் ஒரு சிறிய புல் இருந்தது, ஆனால் இரண்டு முனைகளிலும் எதுவும் இல்லை. நாங்கள் நேற்று வந்தபோது, அது திரும்புவது போல் தோன்றியது, அது சவாலாக இருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்தோம்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஐபிஎல் உரிமையாளரின் வழிகாட்டியான கௌதம் கம்பீர், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஸ்டுடியோவில் இதை "தரமற்ற விக்கெட்" என்றும் குறிப்பிட்டார்.
லக்னோவில் உள்ள பிட்ச் கியூரேட்டருக்கு பதிலாக இப்போது குவாலியரில் இருந்து சஞ்சீவ் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். மார்ச் மாதம் ஐபிஎல் போட்டிகள் தொடங்வதற்கு முன்னதாக அதை தயார் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தொடரை யார் கைப்பற்ற போவது? என்பதை நிர்ணயிக்கும் கடைசி மற்றும் 3வது டி20 போட்டி நாளை புதன் கிழமை (பிப்ரவரி 1 ஆம் தேதி) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil