இந்தியாவுக்கு மிக ஸ்ட்ராங்கான ரிப்ளை கொடுத்திருக்கிறது கேப்டன் டு பிளசிஸ் ஆர்மி.
விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 7 விக்கெட்டுகளுக்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
டெஸ்ட் ஓப்பனராக முதல் சதம் விளாசிய ரோஹித் ஷர்மா, 244 பந்துகளில் 176 ரன்கள் எடுத்து அவுட்டானார். மற்றொரு புறம் இரட்டை சதம் விளாசி, தனது தேர்வை கியூட்டாக ஜஸ்டிஃபை செய்தார் மாயங்க் அகர்வால். 371 பந்துகளில் 215 ரன்கள் குவித்து, கேப்டன் கோலியை குஷிப்படுத்தினார்.
ஓப்பனர்களை தவிர, ரவீந்திர ஜடேஜா மட்டுமே அதிகபட்சம் 30 ரன்கள் எடுக்க, கேப்டன் கோலி உட்பட இதர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். அதிலும், புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி ஆகியோரின் ஆட்டம் ஏமாற்றமே!.
சரி, 502 ரன்கள் எடுத்தாச்சு... போதும் என்ற மனநிலைக்கு வந்த இந்திய அணி டிக்ளேர் செய்ய, எதிர்பார்த்தது போல், தென்னாப்பிரிக்கா இந்திய ஸ்பின்னர்களிடம் தடுமாறியது. அதிலும் அஷ்வினின் சுழலில் அதிகமான சேதாரம் ஏற்பட்டது.
இதனால், நேற்றைய 2ம் நாள் ஆட்டத்தின் முடிவில், 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்திருந்தது. இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில், பிட்ச் இன்னும் அதிகமாக சுழன்று தென்.ஆ., அணியை குலைக்கும் என்று எதிர்பார்த்தால், எல்லாம் அப்படியே அப்படியே ரிவர்ஸ் ஆகிவிட்டது.
டீன் எல்கர் சதம் விளாசி களத்தில் இன்னமும் நின்றுக் கொண்டிருக்க, கேப்டன் டு பிளசிஸ் 55 ரன்கள் எடுத்து செம சப்போர்டிவ் ரோல் கொடுத்தார். அஷ்வின் ஓவரில் அவர் அவுட்டானாலும் அடுத்து களமிறங்கிய டி காக், தனது டிரேட் மார்க் ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார்.
90 ஓவர்கள் வரை, தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்துள்ளது. இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை நீங்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் காணலாம்.
இஷாந்த், ஷமி ஆகியோரின் பந்துவீச்சில் பெரியளவில் இம்பேக்ட் இல்லை. ஸ்பின் டிராக் என்பதால் அதை நாம் காரணம் காட்ட முடியாது. அஷ்வினும், ஜடேஜாவும் தங்களால் முடிந்த அளவு நேக்கு போக்காகவே பந்து வீசினர். இருப்பினும், எல்கர், டி காக், டு பிளசிஸ் ஆகியோரை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்திய பிட்சில், அதுவும் ஸ்பின்னுக்கு ஒத்துழைக்கும் கண்டிஷனில், அதுவும் முந்தைய நாள் 40 ரன்களுக்குள் மூன்று தொடக்க விக்கெட்டுகளை இழந்த பிறகு, மீண்டு எழுந்து வந்து 5 விக்கெட்டுக்கு 298 ரன்கள் அடித்திருப்பது எல்லாம் வேற லெவல்!.
இது தென்னாப்பிரிக்காவின் அபார தன்னம்பிக்கையையே காட்டுகிறது.