updates of India Vs South Africa, 4th T20 Match in tamil: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில், இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்காவும், விசாகப்பட்டினத்தில் நடந்த 3-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. எனவே, தொடரில் தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 4-வது டி-20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று (ஜூன் 17) நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தடு. தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் - ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். ருதுராஜ் 5 ரன்களில் நிகிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த ஷ்ரேயஸ் ஐயர் 4 ரன்களில் வந்த வேகத்திலேயே அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இவரை அடுத்து, இஷான் கிஷன், கேப்டன் ரிஷப் பண்ட் அடுத்தடுத்து ஆட்டமிழந்து மேலும் அதிர்ச்சி அளித்தனர்.
பின்னர், ஹர்திக் பாண்டியா - தினேஷ் கார்த்திக் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 15 ஓவர்கள் வரை நிதானமாக விளையாடிய இந்த ஜோடி அதற்கு பிறகு அதிரடியாக விளையாடியது. ஹர்திக் பாண்டியா 31 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். ஆனால், மறுமுனையில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 50 ரன்களை அடித்து டி20 போட்டியில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், தென் ஆப்பிரிக்க அணிக்கு 170 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் நிகிடி 2 விக்கெட்களையும் யான்சென், மகாராஜ், நோர்ட்ஜெ தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
தென் ஆப்பிரிக்க அணி 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகியது. தொடக்க ஆட்டக்காரர்களாக குயிண்டன் டி காக்கும் டெம்பா பவுமாவும் களமிறங்கினர். குயிண்ட டி காக் 14 ரன் எடுத்திருந்த நிலையில், ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த ட்வயின் பிரடோரியஸ் 6 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். டெம்பா பவுமா 8 ரன் எடுத்திருந்தபோது காயம் காரணமாக விளையாட முடியாமல் பெவிலியன் திரும்பினார். ஹெச் க்ளாசேன் 8 ரன்கள் எடுத்திருந்தபோது சஹல் பந்தில் கால் காப்பில் பட்டு எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். டேவிட் மில்லர் ஹர்ஷல் பட்டேல் பந்துவீச்சில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார். தென் ஆப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து அடுத்தடுத்து சொர்ப்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறிக்கொண்டிருந்தனர்.
இதையடுத்து வந்த மேக்ரோ ஜான்சென் 12, கேஷவ் மகாராஜ் 0, நோர்ட்ஜெ 1, நிகிடி 4 அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இதனால், தென் ஆப்பிரிக்க அணி 16.5 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம், இந்திய அணி 82 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில், ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளும் சஹல் 2 விக்கெட்டுகளும் ஹர்ஷல் படேல், அக்சர் படேல் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
4வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. 5வது டி20 போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெற்றிகொண்டு கோப்பையைக் கைப்பற்றும் என்பதால் இறுதிப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil