India vs West Indies Live score Updates Tamil News: வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், கடந்த 29ம் தேதி நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி-20 போட்டி பாசட்டரேவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நேற்றிரவு நடந்தது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால், அணி வீரர்களின் பொருட்கள் அடங்கிய 'லக்கேஜ்' மைதானத்திற்கு வந்து சேர தாமதம் ஏற்பட்டதால் கடைசி நேரத்தில் போட்டி இரவு 11 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
பிறகு தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் நிகோலஸ் பூரன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சூர்ய குமார் யாதவ் ஜோடி களமிறங்கினர். இதில் கேப்டன் ரோகித் சர்மா முதல் பந்திலே கேட்ச் ஆகி அதிர்ச்சி அளித்தார். அடுத்ததாக சூர்யகுமார் யாதவ் 11 (6) ரன்னிலும், பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 10 (11) ரன்களும், ரிஷப் பண்ட் 24 (12) ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 31 (31) ரன்களும், ஜடேஜா 27 (30) ரன்களும், தினேஷ் கார்த்திக் 7 ரன்களும், அஷ்வின் 10 ரன்களும், புவனேஷ்வர் குமார் 1 ரன்னும், அவேஷ் கான் 8 ரன்களும் எடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இறுதியில் 19.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த இந்திய அணி 138 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஒபேட் மெக்காய் 6 விக்கெட்டுகளும், ஹொல்டர் 2 விக்கெட்டுகளும், ஜோசப் மற்றும் ஹொசைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து,139 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் பிராண்டன் கிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும் அவருடன் ஜோடி சேர்ந்த கெய்ல் மேயர்ஸ் 8 ரன்னிலும், கேப்டன் நிகோலஸ் பூரன் 14 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். தொடர்ந்து களமிறங்கிய ஹெட்மயர் 6 ரன்களில் ஜடேஜாவிடன் கேட்ச் ஆகி வெளியேறினார்.
அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தை பதிவு செய்த தொடக்க வீரர் பிராண்டன் கிங் 68 (52) ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து ரோவ்மேன் பவல் 5 ரன்களில் வெளியேறினார். இறுதி ஓவர்களில் தனது தரமான அதிரடியை வெளிப்படுத்திய தேவான் தாமஸ் 31 (19) ரன்களும், ஒடேன் சுமித் 4 (4) ரன்களும் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதனால் அந்த அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5 போட்டிகள் கொண்ட தொடரில் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணியும், 2வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளன. இவ்விரு அணிகள் மோதும் 3வது டி-20 ஆட்டம் இன்று இரவு அரங்கேறுகிறது.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil