இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, லீட்சில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று புதன்கிழமை மாலை 3:30 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணி பேட்டிங் ஆடி வருகிறது. நேற்று முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 310 ரன்கள் எடுத்தது. கேப்டன் சுப்மன் கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஜெய்ஸ்வால் 87 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், இன்று வியாழக்கிழமை 2-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. களத்தில் இருந்த சுப்மன் கில் - ஜடேஜா ஜோடி தங்களது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இருவரும் இணைந்து 200 ரன்களுக்கு மேல் குவித்தனர். இந்த ஜோடியை உடைக்க இங்கிலாந்து பவுலர்கள் கடுமையாக போராடினர். கில் 150 ரன்களை கடக்க, ஜடேஜா அரைசதம் அடித்து அசத்தினார். அவர் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், 137 பந்துகளில் 10 பவுண்டரிகள், 1 சிக்சருடன் 89 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு களம் புகுந்த வாஷிங்டன் சுந்தர், கேப்டன் கில் உடன் ஜோடி அமைத்தார். இதில் கேப்டன் கில் 311 பந்துகளில் இரட்டை சதம் விளாசி மிரட்டினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது முதல் இரட்டை சதம் இதுவாகும். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சேனா நாடுகளில் (தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா) இரட்டை சதம் அடித்த முதல் ஆசிய கேப்டன் என்ற வரலாற்று சாதனையையும் சுப்மன் கில் படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் இலங்கையின் திலகரத்னே தில்ஷன் 2011- ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் 193 ரன்கள் அடித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதனை முறியடித்துள்ள சுப்மன் கில் புதிய வரலாறு படைத்துள்ளார்.
இந்திய டெஸ்ட் கேப்டனாக இரட்டை சதங்கள்
இதேபோல், இங்கிலாந்துக்கு எதிரான இந்த இரட்டை சதம் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய இந்திய கேப்டன்கள் பட்டியலில் கில் இணைந்துள்ளார். விராட் கோலி 7 இரட்டை சதம் அடித்துள்ளார். எம்.ஏ.கே. பட்டோடி, சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ். தோனி ஆயோரின் வரிசையில் சுப்மன் கில் இடம் பிடித்துள்ளார். மேலும், 2016 ஆம் ஆண்டு நார்த் சவுண்டில் விராட் கோலி 200 ரன்கள் எடுத்த பிறகு, வெளிநாட்டு டெஸ்டில் இந்திய கேப்டன் எடுக்கும் இரண்டாவது இரட்டை சதம் இதுவாகும்.
அத்துடன், இரட்டை சதம் விளாசிய 2-வது இளம் இந்திய கேப்டன் என்கிற பெருமையையும் கில் பெற்றுள்ளார்.
23 வயது 39 நாட்கள் - எம்.ஏ.கே. பட்டோடி - இங்கிலாந்து, டெல்லி, 1964
25 வயது 298 நாட்கள் - சுப்மன் கில் - இங்கிலாந்து, எட்ஜ்பாஸ்டன், 2025
26 வயது 189 நாட்கள் - சச்சின் டெண்டுல்கர் - நியூசிலாந்து, அகமதாபாத், 1999
27 வயது 260 நாட்கள் - விராட் கோலி - மேற்கு இந்திய அணி, நார்த் சவுண்ட், 2016
இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் ஒரு கேப்டன் 11 இரட்டை சதங்கள் அடித்துள்ளார். இதில், இங்கிலாந்து அணியின் கேப்டன் நான்கு, வெளிநாட்டு அணிகளின் கேப்டன் 7. கில்லை விட இளைய வயதில் கிரேம் ஸ்மித் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளார். 2003 இல் எட்ஜ்பாஸ்டன் மற்றும் லார்ட்ஸில் நடந்த தொடர்ச்சியான டெஸ்ட் போட்டிகளில் 277 மற்றும் 259 ரன்கள் அவர் எடுத்தார். அப்போது அவருக்கு 22 வயது, 175 நாட்கள் ஆகும்.
தற்போது வரை இந்திய அணி 134 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 542 ரன்கள் குவித்துள்ளது. சுப்மன் கில் 253 ரன்களுடன் களத்தில் உள்ளார்.