செய்யது முஸ்டாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜனவரி 10ம் தேதி முதல் கொல்கத்தாவில் நடைபெற்று வருகின்றது. இதில் விளையாடி வரும் தமிழக அணி, இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் சிறப்பாகவே பந்து வீசி வருகின்றார். எனவே இவரை, சென்னையில் நடைபெற உள்ள இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நெட் பவுலராக பந்து வீச பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.
பிப்ரவரி 5-ம் தேதி முதல் தொடங்கவுள்ள இந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இரு அணி வீரர்களும் ஜனவரி 27-ம் தேதி சென்னை வரவுள்ளனர். இந்த வீரர்களுக்கும் மூன்று கட்ட கொரானா பரிசோதனையோடு, தனிமைப்படுத்தப்பட உள்ளனர். அதோடு உயிர் தடுப்பு பாதுகாப்பு முறைக்கு (பயோ பபுல்) உள்ளே நுழையவும் உள்ளனர். இதையடுத்து முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நெட் பவுலராக பந்து வீச தேர்வு செய்யப்பட்டுள்ள சந்தீப் வாரியர், சென்னை வந்து சேர கால அவகாசம் வேண்டும் என பிசிசிஐ -யிடம் தமிழக கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
செய்யது முஸ்டாக் அலி கோப்பை போட்டிகளில் தமிழக அணியில் விளையாடி வரும் சந்திப்பு வாரியர் முக்கிய வீரராக பார்க்கப்படுகின்றார். தமிழக அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளையும் வென்று 'எலைட் - பி' பிரிவில் முதலிடத்தில் உள்ளது. இந்த போட்டிகளில் சிறப்பாக பந்து வீசிய சந்தீப் வாரியர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த போட்டியில் தமிழக அணி இறுதி போட்டிக்கு சென்றால், பிப்ரவரி 1-ம் தேதியே சந்தீப் வாரியர் சென்னை வந்து சேர இயலும் என்றும் கூறப்படுகின்றது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil