India Squad for Asia Cup 2022 Tamil News: ஆசிய கண்டத்தில் கிரிக்கெட் விளையாடும் நாடுகள் மோதும் 15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற 27 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் இலங்கையில் நடைபெறவிருந்த நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியா, 7 முறை கோப்பையை வென்ற அணியாகவும் உள்ளது. போட்டியின் கடைசி பதிப்பு ஒரு நாள் போட்டியாக நடத்தப்பட்டது. ஆனால், இம்முறை டி20 வடிவத்தில் இடம்பெற உள்ளது.
இத்தொடரில் ஆறு அணிகள் பங்கேற்க இருக்கும் நிலையில், அவை இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட உள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் குரூப் ஏ பிரிவில் தகுதி பெறும் அணியும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகளும் உள்ளன. ஒவ்வொரு குழுவில் இருந்தும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும். ஒவ்வொரு அணியும் குழு கட்டத்தில் மற்ற அணியுடன் ஒரு முறை மோதும். சூப்பர் 4ல் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை அகில இந்திய மூத்த தேர்வுக் குழு கடந்த திங்கள்கிழமை அறிவித்தது. அதன்படி, ரோகித் சர்மா தலைமையிலான அணியில் முன்னணி வீரர்கள் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் மீண்டும் இடம்பிடித்துள்ளனர். அதேவேளையில், சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷான் போன்றோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இருவரும் தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) மறுவாழ்வு பெற்று வருகின்றனர்.
கொரோனா காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்காத ராகுல், விளையாட்டு ஹெர்னியா அறுவை சிகிச்சையில் இருந்து குணமடைந்து மீண்டும் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் யாருக்கெல்லாம் இந்திய அணியில் வாய்ப்பு?
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியைப் பொறுத்தவரை, தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்குவார்கள். 3வது இடத்தில் விராட் கோலி களமாட வாய்ப்புள்ளது. மிடில்-வரிசையில் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா விளையாடுவார்கள் எனத் தெரிகிறது.
சுழலில் மிரட்ட அஸ்வின், யுஸ்வேந்திர சஹல், ரவி பிஷ்னோய் போன்ற வீரர்களும், வேகத்தாக்குதல் தொடுக்க புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகிய வீரர்களும் உள்ளனர்.
இத்தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல் மற்றும் தீபக் சாஹர் ஆகிய மூன்று வீரர்களும் காத்திருப்புப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா. , ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்.
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil