India vs Afghanistan Test Day 1: பெங்களூருவில் இன்று தொடங்கிய இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 6 விக்கெட் 347 ரன்கள் எடுத்துள்ளது. தவான், விஜய் சதமடித்தனர்.
டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பின், முதன் முறையாக ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அணியுடன் மோதியது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கிய இந்த வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே, பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி, தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், முரளி விஜய் களமிறங்கினர். அதிரடியாக ஆடிய தவான், 96 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில், 19 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும். 94 ரன்களை பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் மூலமாக தவான் திரட்டினார். 87 பந்துகளில் சதமடித்த தவான், ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். அதாவது, ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் நாளின் உணவு இடைவேளைக்கு முன்னர், சதமடித்த முதல் இந்திய வீரர் எனும் பெருமையை தவான் பெற்றார்.
முதல் விக்கெட்டுக்கு தவான்- விஜய் கூட்டணி 168 ரன்கள் சேர்த்தது. இது இந்த இணையின் மூன்றாவது செஞ்சுரி பார்ட்னர்ஷிப் ஆகும்.
நிதானமாக ஆடிய முரளி விஜய், தனது 12வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். அவர், 153 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து லோகேஷ் ராகுல் 64 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து அவுட்டானார். புஜாரா 35 ரன்னில் வெளியேற, கேப்டன் ரஹானே 45 பந்துகளில் 10 ரன்களில் அவுட்டானார். தொடர்ந்து, 4 ரன்னில் தினேஷ் கார்த்திக் நடையை கட்டினார்.
இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில், ஹர்திக் பாண்ட்யா 10 ரன்களுடனும், ரவிச்சந்திரன் அஷ்வின் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணியின் ஸ்கோர் 347-6.
இந்திய அணியை பெரிதும் அச்சுறுத்துவார்கள் என அறியப்பட்ட, 'இந்திய ஸ்பின்னர்களை விட, எங்களிடம் சிறப்பான ஸ்பின்னர்கள் உள்ளனர்' என போட்டி தொடங்கும் முன்னரே, ஆப்கன் கேப்டனால் பாராட்டப்பட்ட ரஷீத் கான் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் பந்துவீச்சை, தவானும், விஜய்யும் சொல்லி வைத்தாற் போல் சிதறடித்தனர். முதல் நாளில் மொத்தமாக 26 ஓவர்கள் வீசிய ரஷீத் கான், 120 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் மட்டும் கைப்பற்றினார். ஆனால், ரஷீத் கான் 17 ஓவரிலேயே 105 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார். போட்டி ஆரம்பித்த போது, எகானமி படு மோசமாக இருந்தது. குறிப்பாக, தவான் இவரை பிரித்து மேய்ந்தார் என்றே சொல்லலாம்.
அதேபோல், மற்றொரு ஸ்பின்னரான முஜீப் உர் ரஹ்மான், முதலில் 7 ஓவர்கள் வீசி 46 ரன்களை வாரி வழங்கினார். அதன்பின் அவருக்கு ஓவரே கொடுக்கப்படவில்லை. இறுதிக் கட்டத்தில் ரஹானே, புஜாரா கட்டை போட ஆரம்பித்த பின்னர் தான் அவர் மீண்டும் பந்துவீச அழைக்கப்பட்டார். இறுதியில் 14 ஓவர்கள் வீசி 69 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
மொஹம்மத் நபி, 8 ஓவர்களில் 45 ரன்கள் கொடுத்ததால் அவருக்கும் அதன்பின் ஓவர்கள் கொடுக்கப்படவில்லை.
இருப்பினும், யாமின் அஹ்மத்சாய் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். வஃபாடர் 1 விக்கெட் வீழ்த்தினார். இடையில் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 280-1 என்று பலமான நிலையில் இருந்த இந்தியா, 347 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.