இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 338 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் 131 ரன்களும், லபுசேசன் 91 ரன்களும், அறிமுக வீரர் புவகோஸ்வி 62 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா 4 விக்கெட்டுகளும், சைனி, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா சுப்மான் கில் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினர். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்த நிலையில், ரோகித் சர்மா 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய புஜாரா தடுப்பாட்டத்தில் ஈடுபட மறுமுனையில் முதல் அரைசதத்தை பதிவு செய்த சுப்மான்கில் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து இன்று நடைபெற்ற 3-வது நாள் ஆட்டத்தில் கேப்டன் ரஹானே 22 ரன்களிலும், விஹாரி 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பிறகு இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. புஜராவும் பண்டும் 5-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தனர். அதன்பிறகு மேற்கொண்டு 49 ரன்கள் சேர்ப்பதற்குள் இந்திய அணி 5 விக்கெட்டுகளை தாரை வார்த்தது.
அரைசதம் கடந்த புஜாரா 50 ரன்களுக்கும், பண்ட் 36 ரன்களுக்கும், அஸ்வின் 10 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இறுதிவரை களத்தில் இருந்த ஜடேஜா 37 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 28 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 100.4 ஓவர்களில் 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில், கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும், ஹாசில்வுட் 2 விக்கேட்டுகளும், ஸ்டார்க் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் 94 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்சை தொடர்ந்துள்ளது.
தொடர்ந்து 94 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் 13 ரன்களிலும், கடந்த போட்டியில் அரைசதம் கடந்த அறிமுக வீரர் புவகோஸ்வி 10 ரன்களிலும் விரைவில் ஆட்டமிழந்தனர். ஆனால் அதன்பிறகு ஜோடி சேர்ந்த லபுசேஸன் – ஸ்மித் ஜோடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். இதனால் ஆஸ்திரேலிய அணியில் ரன்விகிதமும் கனிசமாக உயர்ந்தது. இதன் மூலம் 3-ம் நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில், 2 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்துள்ளது. லபுசேஸன் 47 ரன்களுடனும், ஸ்மித் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
தற்போதைய நிலையில், ஆஸ்திரேலிய அணி 197 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 2 நாட்கள் மீதமுள்ள நிலையில், நாளை போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை விரைவாக ஆட்டமிழக்க செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முன்னதாக இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கின்போது, ஜடேஜா மற்றும் பண்ட் ஆகியோர் பீல்டிங் செய்ய வரவில்லை. இதில் பண்ட்க்கு பதிலான விருத்திமான் சஹா களமிறங்கிய நிலையில், ஜடேஜாவுக்கு பதிலாக மயங்க் அகர்வால் களமிறங்கினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"