இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. இந்த போட்டிக்கான இந்திய அணியில், அஸ்வின், மற்றும் பும்ரா நீக்கப்பட்டு தமிழக வீரர்களான டி.நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் காயமடைந்த தொடக்க வீர்ர் புகோவஸ்கி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மார்கஸ் ஹேரிஸ் சேர்க்கப்பட்டார்.
இந்தியா நேரப்படி காலை 5 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் வார்னருடன் மார்கஸ் ஹேரிஸ் தொடக்க ஆட்டகார்ராக களமிறங்கினார். இதில் டேவிட் வார்னர் 1 ரன்னிலும், ஹேரிஸ் 5 ரன்களிலும் விரைவில் ஆட்டமிழந்தனர். இதில் வார்னர் இந்த தொடரில் 3-வது முறையாக இந்திய வீரர் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனால் 17 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணிக்கு 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த லபுசேஸன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி நல்ல அடித்தளம் அமைத்தது. இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்த நிலையில், 36 ரன்கள் எடுத்த ஸ்மித் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதுவே சர்வதேச டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தரின் முதல் விக்கெட்டாக அமைந்தது. இதனையடுத்து களமிறங்கிய மேத்யூ வேட் லபுசேஸனுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி வந்தார். தொடர்ந்து அரைசதத்தை நெருங்கிய மேத்யூ வேட் சிறப்பாக விளையாடி 45 ரன்கள் எடுத்து நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
சர்வதேச டெஸ்ட் அரங்கில் காலடி எடுத்து வைத்த தமிழக வீரர் நடராஜனின் முதல் டெஸ்ட் விக்கெட் இதுவாகும். மறுபுறம் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய லபுசேஸன் டெஸ்ட் போட்டிகளில் தனது 5-வது சதத்தை நிறைவு செய்த நிலையில், 204 பந்துகளில் 108 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். முதல்நாள் ஆட்டநேர முடிவில் 87 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் குவித்துள்ளது. கிரீன் 28 ரன்களிலும், பெய்ன் 38 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் நடராஜன் 2 விக்கெட்டுகளும், சிராஜ், தாகூர், சுந்தர் தலா 1 விக்கெட்டும் வீழத்தினர்.
தொடர்ந்து இன்று தொடங்கிய 2-வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பெட் செய்த ஆஸ்திரேலிய அணியில், கேப்டன் பெய்ன் 50 ரன்களும், கிரீன் 47 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கம்மின்ஸ் 2 ரன்களிலும், அதிரடியாக விளையாடிய லியோன் 22 பந்துகளில் 24 ரன்களும், ஹாசில்வுட் 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில், 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கடைசிவரை களத்தில் இருந்த ஸ்டார்க் 20 ரன்கள் எடுத்தார்.
நேற்று 274 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற நிலையில், 2-வது நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி மேற்கொண்டு 95 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர்களான தமிழகத்தில் நடராஜன், சுந்தர், தாகூர் தலா 3 விக்கெட்டுகளும், சிராஜ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில், இளம் வீரர் சுப்மான்கில் 7 ரன்களிலும், சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 44 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
2-வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 8 ரன்களிலும், ரஹானே 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 3-வது நாள் ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"