India vs Kuwait, South Asian Championship Bengaluru final Tamil News: 14-வது தெற்கு ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், குவைத்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இந்நிலையில், சாம்பியன் பட்டத்தை வாகை சூடப் போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்றிரவு (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.
இந்தியா கடந்து வந்த பாதை
உலக தரவரிசையில் 100-வது இடத்தில் உள்ள இந்திய அணி லீக் சுற்றில் பாகிஸ்தான், நேபாளத்தை சாய்த்தது. குவைத் அணிக்கு எதிரான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. பிறகு அரைஇறுதியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் லெபனானை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
தெற்கு ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் 8 முறை சாம்பியனான இந்தியா 9-வது முறையாக மகுடம் சூடுவதில் தீவிரம் காட்டுகிறது. இருப்பினும், இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரியையே (இதுவரை 5 கோல்) இந்தியா அதிகம் நம்பியுள்ளது. அவருடன் மற்ற வீரர்களும் ஒருசேர கைகோர்த்தால் இந்தியாவுக்கு சமபலம் கிடைத்து விடும்.
இந்திய அணியின் முன்னணி வீரர் சந்தோஷ் ஜின்கான் இரண்டு மஞ்சள் அட்டை பெற்றநிலையில், அவரால் அரைஇறுதியில் ஆடமுடியாமல் போனது. அவர் தற்போது அணிக்கு திரும்புவது ஊக்கமளிக்கும். அத்துடன் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் இந்தியாவுக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
இந்திய தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் குவைத்துக்கு எதிரான லீக்கின் போது நடுவர்களின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் 2 போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதனால் இன்றைய ஆட்டத்திலும் அவர் வீரர்களின் பகுதியில் அமர முடியாது. அவருக்கு பதிலாக உதவி பயிற்சியாளர் மகேஷ் காவ்லி பயிற்சியாளர் பணியை கவனிப்பார்.
குவைத் அணி எப்படி?
இந்த தொடருக்கு சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொண்ட மேற்கு ஆசியாவை சேர்ந்த அகமது அல் டெப்ரி தலைமையிலான குவைத் அணி தரவரிசையில் 141-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி லீக் சுற்றில் இந்தியாவுடன் 'டிரா' கண்ட நிலையில், நேபாளம், பாகிஸ்தான் அணிகளை எளிதில் வீழ்த்தியது. அரைஇறுதியில் கூடுதல் நேரத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வங்கதேச அணியையும் சாய்த்தது. குவைத் அணி முதல் முறையாக கோப்பையை கையில் ஏந்தும் முனைப்பில் உள்ளதால், இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
நேருக்கு நேர்
இந்திய - குவைத் அணிகள் இதுவரை 4 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 2-ல் குவைத்தும், ஒன்றில் இந்தியாவும் வெற்றி பெற்றன. மற்றொரு ஆட்டம் டிராவில் முடிந்தது.
நேரலை
இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை டி.டி. ஸ்போர்ட்ஸ் சேனல் நேரலையில் ஒளிபரப்பு செய்தது.
இந்தியா வெற்றி
செவ்வாய்க்கிழமை (ஜூலை 4) நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் இரு அணிகளும் 120 நிமிடங்களில் 1-1 என்ற கோல் கணக்கில் டெட்லாக் செய்தன.
இதனால், பதற்றமான பெனால்டி ஷூட்அவுட்டில் 5-4 என்ற கோல் கணக்கில் குவைத்தை வீழ்த்தி 9வது முறையாக SAFF சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்தியா வென்றது.
ஐந்து சுற்று பெனால்டி உதைகளுக்குப் பிறகு ஸ்கோர்லைன் 4-4 ஆக இருந்தது. அப்போது வாழ்வா சாவா விதி பயன்படுத்தப்பட்டது.
மகேஷ் நௌரெம் கோல் அடித்தார், ஆனால் டைவிங் செய்த இந்திய கோல் கீப்பர் குர்பிரீத் சிங் சந்து கலீத் ஹாஜியாவின் ஷாட்டைக் காப்பாற்றி சொந்த அணிக்கு வெற்றியைக் கொடுத்தார்.
நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில், ஷபைப் அல் கால்டி 14 வது நிமிடத்தில் குவைத்தை முன்னிலைப்படுத்தினார், 39 வது நிமிடத்தில் லல்லியன்சுவாலா சாங்டே சமன் செய்தார். இந்தியா அபார வெற்றி பெற்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil