கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் விதமாக, இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Advertisment
இது தொடர்பாக அவர் கூறுகையில், "இந்தியா எங்களுக்கு 10,000 வென்டிலேட்டர்களை உருவாக்கிக் கொடுத்தால், அந்த செயலை பாகிஸ்தான் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்.
கொரோனா பாதிப்பால் உருவாகியுள்ள இந்த கடினமான காலக்கட்டத்தில், நலநிதி திரட்டுவதற்காக இந்தியா, பாகிஸ்தான் இடையே மூன்று போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை நடத்த வேண்டும் என்று நான் பரிந்துரைக்க விரும்புகிறேன். இந்த போட்டிகளின் முடிவு எதுவாக இருந்தாலும் இரு நாட்டினருமே கவலைப்படமாட்டார்கள்.
விராட் கோலி சதம் அடித்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். பாபர் அசாம் செஞ்சுரி அடித்தால் நீங்கள் மகிழ்ச்சி அடையுங்கள். களத்தில் எந்த முடிவு கிடைத்தாலும் இரு அணிகளுமே வெற்றியாளர்கள் தான். இதன் மூலம் கிடைக்கும் வருவாயை, இரு நாடுகளும் கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகளுக்கு சரிசமமாக பகிர்ந்து கொள்ளலாம்.
ரசிகர்கள் இன்றி இந்த போட்டியை நடத்தலாம். இப்போது ஒவ்வொருவரும் வீட்டிலேயே இருப்பதால் டி.வி.யின் மூலம் அதிக அளவில் பார்வையாளர்களை ஈர்க்க முடியும். நிதி திரட்ட போட்டி நடத்தலாம் என்று நாங்கள் சிபாரிசுதான் செய்ய முடியும். சம்பந்தப்பட்டவர்கள் தான் அது குறித்து முடிவு செய்ய வேண்டும்" என்று கூறினார்.
மேலும், ஷஹித் அப்ரிடியின் அறக்கட்டளைக்கு நிதித் திரட்ட கோரிய யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜனுக்கு எழுந்த எதிர்ப்பு குறித்து பேசிய அக்தர், "அவர்களை விமர்சிப்பது மனிதாபிமானமற்றது (யுவராஜ் மற்றும் ஹர்பஜன்). இது நாடுகளைப் பற்றியோ அல்லது மதத்தைப் பற்றியோ அல்ல, அது மனிதநேயத்தைப் பற்றியது" என்று அக்தர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”