சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி (50 ஓவர்கள்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் நேற்று முன்தினம் புதன்கிழமை (பிப்.19) முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது. ஐ.சி.சி ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் 2023 முடிவுகள் அடிப்படையில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்தத் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் சாம்பியன்கள் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதி பெறாத நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். சாம்பியன்ஸ் டிராபியில் ஒவ்வொரு ஆட்டமும் மிகவும் முக்கியமானது. ஒன்றில் தோற்றாலும் அரைஇறுதிக்குள் நுழையும் வாய்ப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். அதனால், ஒவ்வொரு அணியும் கடுமையாக போராடும்.
இந்நிலையில், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று முன்தினம் கராச்சியில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. நேற்று வியாழக்கிழமை துபாயில் நடந்த ஆட்டத்தில் வங்கதேசத்தை இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு கராச்சியில் தொடங்கி நடைபெறும் 3-வது போட்டியில் 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்தியா - பாகிஸ்தான் மோதல்
இந்தத் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பரம போட்டியாளர்களான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (பிப்.23) துபாயில் அரங்கேற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணி துபாய் வந்துள்ளது. அந்த அணியின் முன்னணி வீரரான ஃபகார் ஜமான் காயம் காரணமாக விலகியுள்ளார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு பாகிஸ்தான் எப்படி தகுதிபெற முடியும்?
பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டுமானால், குரூப் கட்டத்தில் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். அடுத்த இரண்டு போட்டிகளில் ஒன்றில் தோல்வியடைந்தால் கூட பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும். பாகிஸ்தான் மற்ற போட்டிகளில் வென்றாலும் கூட, தற்போதைக்கு அந்த அணியின் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. அதனால், அடுத்த 2 போட்டிகளில் நல்ல நெட் ரன்ரேட்டில் வெற்றி பெற வேண்டும்.
பாகிஸ்தான் அடுத்த ஆட்டத்தில் இந்தியாவிடம் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் பாகிஸ்தான் அரைஇறுதி வாய்ப்பு மங்கி விடும். தங்களது அணியை தொடரில் உயிர்ப்புடன் வைக்க பாகிஸ்தான் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளை நல்ல நெட் ரன்ரேட்டில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும்.
இந்தியாவைப் பொறுத்தவரை, ஏற்கனவே வங்கதேசத்தை வீழ்த்திய உத்வேகத்துடன் பாகிஸ்தானை எதிர்கொள்ளும். பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்தினால் அரைஇறுதிக்குள் நுழைவை உறுதி செய்துவிடும். இதில் ஒரு போட்டியில் தோல்வியுற்றாலும் கூட இந்தியாவுக்கு வாய்ப்பு இருக்கிறது.