தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில், டர்பனில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. தொடர்ந்து, க்கெபெர்ஹாவில் நடந்த 2-வது போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால், தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India vs South Africa LIVE Cricket Score, 3rd T20I
இந்த நிலையில், இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் 3வது போட்டி செஞ்சுரியன் நகரில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் இன்று புதன்கிழமை இரவு 8:30 மணிக்கு தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில், சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் போட்டியில் சதம் அடித்து அசத்திய சாம்சன் 2-வது போட்டியில் 3 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆன நிலையில், இந்த போட்டியிலும் ரன் கணக்கை தொடங்கமலே டக்அவுட்டில் வெளியேறினார்.
அடுத்து வந்த திலக் வர்மா அபிஷேக் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடியில் இறங்கினார். இவர்களின் அதிரடி காரணமாக இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்த நிலையில், அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த அபிஷேக் சர்மா 25 பந்துகளில் 3 பவுண்டரி 5 சிக்சருடன் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஒரு ரன்னில் வெளியேறினாலும், ஹர்திக் பாண்டியா சிறிது நேரம் தாக்குபிடித்து ஆடினார்.
மறுமனையில் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா அரைசதம் கடந்த நிலையில், தொடர்ந்து தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த போட்டியில் இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா, 16 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 18 ரன்களும், ரின்கு சிங் 8 ரன்களும், எடுத்து ஆட்டமிழந்த நிலையில், அதிரடியாக விளையாடிய திக் வர்மா சதம் கடந்து அசத்தினார். ரமன்தீப் சிங் 6 பந்துகளில் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதிவரை களத்தில் இருந்த திலக் வர்மா 56 பந்துகளில் 8 பவுண்டரி 7 சிக்சருடன், 107 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்துள்ளது. அக்சர் பட்டேல் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தார். தென்ஆப்பிரிக்க அணி தரப்பில், சிமிலேன், மக்ராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஜென்சன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணி முதல் ஓவரில் 7 ரன்கள் எடுத்திருந்தபோது மறை குறுக்கிட்டதால் சிறிது நேரம் ஆட்டம் தடைபட்டது. அதன்பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியஙபோது, தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராக்கில்டன் 15 பந்துகளில் 20 ரன்களும், ஹென்ட்ரிக்ஸ் 13 பந்துகளில் 21 ரன்களும் எடுத்து வெளியேறினர்.
அடுத்து வந்த, கேப்டன் மார்கன் சிறிது நேரம் தாக்குபிடித்த நிலையில், 18 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்டப்ஸ் 12 ரன்களில் ஆட்டமிழந்தாலும் தொடர்ந்து வந்த க்ளாசன் அதிரடியில் அசத்தினார். இதனால் தென்ஆப்பிரிக்க அணியின் ஸ்கோர் அதிகரித்த நிலையில், அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த டேவிட் மில்லர் 18 ரன்களில் வெளியேறினாலும் அடுத்து வந்த, மார்கோ ஜென்சன் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தார்.
இவரின் அதிரடி ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்க அணி வெற்றியை நோக்கி முன்னேறிய நிலையில், அரைசதத்தை நெருங்கிய க்ளாசன் 22 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதே சமயம் மறுமுனையில் அரைசதம் கடந்த ஜென்சன் 17 பந்துகளில் 4 பவுண்டரி 5 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் தென்ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கோட்சி 2 ரன்களுடனும், அன்டில் சிம்லோன் 5 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இதன் மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 எனற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி தரப்பில், அர்ஷ்தீப் 3 விக்கெட்டுகளும், வருன் 2 விக்கெட்டுகளும், ஹர்த்திக், பட்டேல் ஆகியோர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 4-வது மற்றும் கடைசி போட்டி நாளை (நவம்பர் 15) நடைபெறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“