Asian-games 2023: ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி போட்டிகள் நேற்று திங்கள்கிழமை (அக்டோபர் 2 ஆம் தேதி) முதல் தொடங்கி நடந்து வருகிறது. இந்த கபடி போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் இரு அணிகளும் மோதுகின்றன.
ஆண்களுக்கான போட்டியில் 7 அணிகளும், பெண்கள் பிரிவில் 9 அணிகளும் பங்கேற்க உள்ளன. இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஆண்களுக்கான 'ஏ' பிரிவில் இந்தியா, ஜப்பான், வங்கதேசம், தாய்லாந்து, சீன தைபே ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் ஈரான், பாகிஸ்தான், கொரியா குடியரசு, மலேசியா ஆகிய அணிகளும் உள்ளன. பெண்களுக்கான 'ஏ' பிரிவில் இந்தியா, சீன தைபே, தாய்லாந்து, கொரியா குடியரசு ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் வங்கதேசம், நேபாளம், ஈரான் அணிகளும் உள்ளன.
இந்த அணிகள் லீக் சுற்றில் ரவுண்ட்-ராபின் முறையில் ஒவ்வொரு அணியும் ஒருமுறை நேருக்கு நேர் சந்திக்கும். ஒவ்வொரு ஆடவர் போட்டியின் கால அளவு 45 நிமிடங்களாகவும், பெண்களுக்கான போட்டிகள் 35 நிமிடங்களாகவும் இருக்கும். லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் இறுதிப் போட்டியில் களமிறங்குவார்கள், தோல்வியுற்றவர்கள் வெண்கலப் பதக்கத்தைப் பெறுவார்கள். ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான இரண்டு இறுதிப் போட்டிகளும் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஆசிய விளையாட்டு கபடியில் இந்திய ஆண்கள் 7 முறை பட்டத்தை வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதேவேளையில், இந்திய பெண்கள் கபடி அணி 2010 முதல் இதுவரை இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.
இந்தியா - தென்கொரியா மோதல்
இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் இன்று நடந்த பெண்கள் கபடி குரூப் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா - தென்கொரியா அணிகள் மோதின மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. இறுதியில் ஆட்ட நேர முடிவில் 56-23 என்ற புள்ளிகள் கணக்கில் தென்கொரிய அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
நேற்று நடந்த இந்தியாவின் தொடக்க ஆட்டத்தில் சீன தைபே அணியை எதிர்கொண்ட நிலையில், இந்தப் போட்டியில் இரு அணிகளும் தலா 34 புள்ளிகள் எடுத்தனர். இதனால் போட்டி சமனில் முடிந்தது. தற்போது இந்திய அணி தென்கொரியவை வீழ்த்தி அதிலிருந்து மீண்டுள்ளது.
இந்திய பெண்கள் அணி நாளை புதன்கிழமை (அக்டோபர் 3) பிற்பகல் 1:30 மணிக்கு தாய்லாந்து அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பித்தக்கது.
வாங்க தேசத்தை சாய்த்த இந்தியா
இன்று காலை கபடி ஆண்கள் அணி குரூப் ஏ - கேம் 3 - போட்டி 5ல் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் போட்டி நேர முடிவில் 55 -11 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வங்கதேசத்தை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
நாளை காலை 6 மணிக்கு நடக்கும் போட்டியில் இந்தியா தாய்லாந்து அணியுடன் மோதுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“