இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்குகியது. டாஸில் வெற்றி பெற்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்ட் மழை பாதிப்பால் ‘டிரா’ ஆனது. நாக்பூரில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த டெஸ்டில் டிராவோ அல்லது வெற்றி பெற்றாலோ தொடர் இந்தியாவின் வசமாகி விடும். அத்துடன் தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியிருக்கும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளின் உலக சாதனையை சமன் செய்து விடலாம்.
முந்தைய டெஸ்டில் படுதோல்வி அடைந்த இலங்கை அணி, அதற்கு பரிகாரம் தேடுவதற்கு முயற்சிக்கும். ஆனால் அந்த அணி வீரர்கள் ஆடி வரும் விதத்தை பார்த்தால் இந்தியாவிடம் முழுவீச்சில் தாக்குப்பிடிப்பார்களா? என்பது சந்தேகம் தான். இந்த தொடரில் இந்திய தரப்பில் ஒரு இரட்டை சதம், 4 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இலங்கை பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட மூன்று இலக்கை தொடவில்லை.
இரு அணி வீரர்களின் பட்டியல் :
இந்தியா: முரளிவிஜய், ஷிகார் தவான், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரோகித் சர்மா, விருத்திமான் சஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ்.
இலங்கை: சமரவிக்ரமா, கருணாரத்னே, திரிமணே, சன்டிமால் (கேப்டன்), மேத்யூஸ், நிரோஷன் டிக்வெல்லா, தசுன் சனகா, தில்ருவான் பெரேரா, ரங்கனா ஹெரதி, சுரங்கா லக்மல், லாஹிரு காமகே.
டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இந்திய அணி இதுவரை 33 டெஸ்டில் விளையாடி 13-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும், 14-ல் டிராவும் கண்டுள்ளது.
இந்திய அணி கடந்த 30 ஆண்டுகளில் இங்கு தோற்றது கிடையாது. 1987-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி இங்கு விளையாடி உள்ள 11 டெஸ்டுகளில் 10-ல் வெற்றியும், ஒன்றில் டிராவும் சந்தித்துள்ளது. இலங்கை அணி இங்கு ஒரே ஒரு டெஸ்டில் விளையாடி அதிலும் தோல்வியையே தழுவியது.