India vs England: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், ஐதராபாத்தில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்கிற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏ.சி.ஏ - வி.டி.சி.ஏ கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வீரர்கள் மாற்றம்
இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டது. காயம் அடைந்த கே.எல்.ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக அறிமுகமாக வீரராக ரஜத் படிதார் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதேபோல், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு பதிலாக முகேஷ் குமார் சேர்க்கப்பட்டார். மறுபுறம், இங்கிலாந்து இரண்டு மாற்றங்களைச் செய்தது. காயம் அடைந்த ஜாக் லீச்சிற்குப் பதிலாக ஆஃப் ஸ்பின்னர் ஷோயப் பஷீர் மற்றும் மார்க் வுட்டுக்குப் பதிலாக ஜேம்ஸ் ஆண்டர்சன் சேர்க்கப்பட்டனர்.
முதல் நாள் ஆட்டம் - டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்
இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, இந்திய அணி அதன் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 93 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க வீரராக களமிறங்கி அரைசதம், சதம் என தனது சிறப்பான பேட்டிங்கை இன்றைய நாள் முழுதும் வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 179 ரன்களுடனும், அஸ்வின் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நாளை 2ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்ஃபராஸ் கானுக்கு ஆதரவு
இந்நிலையில், இந்திய அணியில் அறிமுக வீரராக சர்ஃபராஸ் கான் ஏன் சேர்க்கப்படவில்லை என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வரும் ரசிகர்கள், இந்திய நிர்வாகம் அவருக்கு அநீதி இழைத்துவிட்டதாக கடுமையாக சாடி வருகிறார்கள்.
இந்திய அணியில் காயம் அடைந்த கே.எல்.ராகுலுக்குப் பதிலாக சர்ஃபராஸ் கான் அல்லது ரஜத் படிதார் இந்த இவர்களில் யார் அறிமுகமாவார்கள்? என்று பலரும் பரபரப்பாக விவாதித்து வந்தார்கள். இந்திய அணி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் இருந்தது. பெரும்பாலான ரசிகர்கள், இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் சர்ஃபராஸ் கான் இந்தியாவுக்காக அறிமுகமாக வேண்டும் என்று விரும்பினர்.
ஆனால், ரஜத் படிதார் அறிமுக வீரராக களமிறங்குகிறார் என கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தபோது, சமூக ஊடகங்களில் பரபரப்பு ஏற்பட்டது. விராட் கோலிக்கு மாற்றாக இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ரஜத் படிதாரில் சர்ஃபராஸ் கானுக்கு தகுதியான ஒருவர் தேர்வு செய்யப்படாததால் பலர் ஏமாற்றம் அடைந்தனர். சர்ஃபராஸ் கானை இந்திய அணி தவறவிட்டதில் ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்கள் தங்களது ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் இந்தியா ஆடும் லெவன் வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகி த் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ஸ்ரீகர் பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகேஷ் குமார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“